கனடாவின் பிராந்திய பொலிஸார் தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் (காணொளி): ராதிகா சிற்சபேசன் வலியுறுத்தல்
கனடாவின் பீல் பிராந்திய பொலிஸார் கனடாவில், வாழும் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என கனடாவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் இலங்கை தீவுக்கு பயணம் செய்திருந்த கனடாவின் பீல் பிராந்திய பொலிஸ் பிரதானி நிசான் துரையப்பா, இலங்கை அரசாங்கத்துடன் இணங்கி செல்லும் வகையில் செயற்பட்டு இருந்தார். அத்துடன் இலங்கை அரசின் இன அழிப்பு செயற்பாடுகளையும் மூடிமறைக்க முற்படுகிறார்.
இந்தநிலையில் கனடாவின் பீல் பிராந்திய பொலிஸ் தலமையகம் நிசான் துரையப்பாவை இலங்கைக்கு அனுப்பியமைக்காக பகிரங்க மன்னிப்பு கோரவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை பொலிஸாருக்கு பல்வேறு உதவிகளை வழங்குவதாக நிசான் துரையப்பா உறுதிமொழி வழங்கியமை மிகத்தவறானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை பொலிஸாரும், படையினரும் தமிழ் மக்களுக்கு எதிராக பல்வேறு குற்றச் செயல்களை இழைத்துள்ள நிலையில் நிசான் துரையப்பா உதவி வழங்கியமை தமிழ் மக்களுக்கு அவமானம் என்றும் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் இன அழிப்பில் ஈடுபட்டதாக உலக நாடுகளும் பொலிஸ் பிரிவுகளும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் கனடாவின் பீல் பிராந்திய பொலிஸ் பிரதானியாக பதவி வகிக்கும் நிசான் துரையப்பா இலங்கை படையினருக்கு உதவி வழங்குவதாக உறுதி அழித்தமை எந்த அடிப்படையில் என கேள்வி அனுப்பியுள்ளார்.
இவ்வாறான பின்னணியில் பீல் பிராந்திய பொலிஸார், இலங்கை பொலிஸாருக்கு பயிற்சிகளோ அல்லது வேறும் உதவிகளோ வழங்கப்படக் கூடாது என தெரிவித்துள்ளதோடு தமிழ் மக்களிடம் பீல் பிராந்திய பொலிஸார் மன்னிப்பு கோர வேண்டுமெனவும் ராதிகா வலியுறுத்தியுள்ளார்.
பீல் பிராந்தியத்தில் 22,780 தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் 32,960 பேர் தமிழ் அல்லது இலங்கை பூர்வீகத்தைக் கொண்டவர்கள் எனவும் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார்.