மற்றொரு வழக்கில் இம்ரான் கான், அவரது மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை: தீர்ப்பினை வழங்கிய இஸ்லாமாபாத் ஊழல் எதிர்ப்பு நீதிமன்றம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஊழல் எதிர்ப்பு நீதிமன்றம் புதன்கிழமை (31) தீர்ப்பை வழங்கியது.
அரச இரகசியங்களை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட சைபர் மோசடி வழக்கில் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளிவிவாகர அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷிக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை செவ்வாய்க்கிழமை (30) விதிக்கப்பட்டது.
நீதிமன்றின் இந்த தீர்ப்புகளானது பெப்ரவரி 8 பொதுத் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக வந்துள்ளன.
2018 ஆகஸ்ட் முதல் 2022 ஏப்ரல் வரை பாகிஸ்தானின் பிரதமராக இருந்த இம்ரான் கான் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார்.
சைபர் வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் உள்ளார்.
இந் நிலையில் புதிய நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அமைவாக இம்ரான் கானின் தண்டனைகள் தொடர்ச்சியாக அல்லது ஒரே நேரத்தில் வழங்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.