பாக்.பொதுத் தேர்தலில் போட்டியிடும் இம்ரான் கான் கட்சி: நீதிமன்றம் வழங்கியுள்ள சிறப்பு தீர்ப்பு

OruvanOruvan

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் அடுத்த மாதம் 8ஆம் திகதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட அந்நாட்டு உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

பல்வேறு முறைகேடு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சியின், கிரிக்கெட் மட்டை சின்னம் பறிக்கப்பட்டுள்ளது. இது அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர், அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்களை, பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.

இந்நிலையில், பிடிஐ கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள எலாஹி, தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட அனுமதிக்குமாறு லாகூர் உயர்நீதிமன்றத்தை நாடினார். அவரது மனுவை விசாரித்த லாகூர் உயர்நீதிமன்றம், அவர் தேர்தலில் போட்டியிட தடை விதித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எலாஹி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது பிடிஐ கட்சித் தலைவர் எலாஹி மற்றும் அக்கட்சியை சேர்ந்த தலைவர்கள் உமர் அஸ்லாம், தாஹிர் சாதிக், சனம் ஜாவேத் மற்றும் ஷௌகத் பாஸ்ரா ஆகியோர் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.