இராஜதந்திர மோதலுக்கு பின் இந்திய மாணவர்களுக்கான அனுமதி 86% வீழ்ச்சி: கனடா அமைச்சர்
கனடாவில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவரின் கொலை தொடர்பான இராஜதந்திர மோதல் காரணமாக இந்திய மாணவர்களுக்குக் கடந்த ஆண்டு கனடா வழங்கிய கல்வி நடவடிக்கைக்கான அனுமதிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைத்துள்ளது.
இந்திய மாணவர்களுக்கான கல்வி அனுமதிகளின் எண்ணிக்கை விரைவில் மீண்டு வர வாய்ப்பில்லை என கனேடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரிட்டிஷ் கொலம்பியாவில் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசாங்க முகவர்களுடன் தொடர்புடைய ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலும் இராஜதந்திர பதட்டங்கள் வெடித்தன.
இதன் பின்னணியில் இந்தியாவில் இருந்து கல்வி நடவடிக்கைக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான கனடா அனுமதியை பாதியாக குறைத்து விட்டதாக மார்க் மில்லர் சுட்டிக்காட்டினார்.
2023 ஒக்டோபரில், கனடா 41 தூதரக அதிகாரிகளை அல்லது அதன் ஊழியர்களில் மூன்றில் இரண்டு பங்கை இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டது.
மேலும், இந்த சர்ச்சையானது இந்திய மாணவர்களை ஏனைய நாடுகளில் கல்வி நடவடிக்கையினை மேற்கொள்ள வழி அமைத்தது.
இதனால், 2022ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் இந்தியர்களுக்கு 108,940 கல்விக்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், 2023 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் இந்தியர்களுக்கு 14,910 கல்விக்கான அனுமதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.