பிரதமராக பதவியேற்றார் ஹரிணி: ஜனாதிபதி அநுர முன்னிலையில் சத்தியப்பிரமானம்

OruvanOruvan

இலங்கை சோசலிசக் குடியரசின் புதிய பிரதமராக தேசிய மக்கள் சகத்தியின் கலாநிதி ஹரிணி அமரசூரிய சற்று முன்னர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதன்படி, இலங்கை வரலாற்றில் பிரதமராக பதவியேற்கும் மூன்றாவது பெண்மணி என்ற பெருமையை ஹரிணி அமரசூரிய பெற்றுள்ளார்.

முன்னதாக சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் இந்த நாட்டின் பிரதமர்களாக பதவி வகித்துள்ளனர்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவு செய்யப்பட்டார்.

1970ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் திகதி பிறந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, அரசியல்வாதியாக மாறுவதற்கு முன்னர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உயர்கல்வி கற்றவர்.

எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சமூக மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

2011 ஆம் ஆண்டு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தில் உறுப்பினராக இணைந்த பின்னர், இலவசக் கல்விக்கான போராட்டங்களில் கலந்து கொண்ட சமூக ஆர்வலரும் ஆவார்.

பல வருடங்கள் சிறுவர் பாதுகாப்பு மற்றும் உளவியல் வைத்தியராக பணியாற்றிய பின்னர், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞான துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக இணைந்து கொண்டார்.

ஹரிணி அமரசூரிய 2019 ஆம் ஆண்டு தேசிய புத்திஜீவிகள் அமைப்பில் இணைந்தார். அதே வருடம் ஜனாதிபதி தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவுக்காக பிரச்சாரம் செய்தார்.

12 ஆகஸ்ட் 2020 அன்று, இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் முதல் முறையாக நாட்டின் 16வது நாடாளுமன்றத்தில் நுழைவதற்காக தேசியப் பட்டியல் வேட்பாளராக தேசிய மக்கள் சக்தியால் அவர் பரிந்துரைக்கப்பட்டார்.

தேசியப் பட்டியல் வேட்பாளராகப் பரிந்துரைக்கப்பட்ட பின்னர் திறந்த பல்கலைக்கழகத்தில் கல்விசார் சிரேஷ்ட விரிவுரையாளராக ஹரிணி தனது பணியைத் தொடர முடியுமா என்ற சிக்கல் நிலையும் எழுந்தது.

இதனையடுத்து, திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பதவியில் இருந்து விலகி நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan