முஸ்லிம் சமூகத்திடம் அரசாங்கம் மன்னிப்புக்கோரும்: அதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் தாக்கல்
![Oruvan](https://gumlet.assettype.com/oruvan/2024-04/922746b2-3f33-43b4-808d-c0f8a7b61cf4/New_Project__80_.jpg?format=webp&w=800&q=70)
![Oruvan](/site-related-assets/no-image.webp)
கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் பின்பற்றப்பட்ட ‘கட்டாய சடலம் எரிப்பு’ (ஜனாசா தகனம்) தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைக்கு பல்வேறு சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் வெளியாகியிருந்தன.
இந்த விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள போவதில்லையென திட்டவட்டமாக கூறியதுடன், ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகளின் கோரிக்கைகளையும் நிராகரித்திருந்தது.
கோட்டாவின் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை
கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இறப்பவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்டால் நீரின் வழியாக தொற்று பரவும் மற்றும் நீர் மசுப்படும் அபாயம் இருப்பதாக அரசாங்கம் அதற்கான காரணங்களை கூறியது.
என்றாலும், சடலத்தை புதைக்க அல்லது தகனம் செய்ய முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைகளை வழங்கியிருந்தது.
உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைகளின் பிரகாரம் முஸ்லிம்களின் சடலத்தை புதைப்பதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கைகள் முஸ்லிம் சமூகம் மற்றும் மனித உரிமைசார் அமைப்புகளிடமிருந்து முன்வைக்கப்பட்ட போதும் இதனை கோட்டாவின் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில், நேற்று புதன்கிழமை அட்டனில் இடம்பெற்ற இப்தார் கழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் ஜீவன் தொண்டமான்,
”கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட ‘கட்டாய சடலம் தகனம்’ (ஜனாசா எரிப்பு) கொள்கை தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடம் அரசு முறையாக மன்னிப்புகோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும்.
அமைச்சராக இருந்தவர்கள் இதற்கு பொறுப்புகூறவேண்டும்
முஸ்லிம் மக்களின் உணர்வுகள், மத நம்பிக்கை என்பன கருத்திற்கொள்ளப்படாமல் கொரோனா காலப்பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தால் அந்த சமூகத்தினர் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். அதற்கான மன்னிப்பு கோருகின்றேன்.
கடந்த வருடம் ஜனவரி மாதமே நான் அமைச்சராக பதவியேற்றேன். எனினும், இதுவிடயத்தில் நீர்வழங்கல் அமைச்சு தொடர்புபட்டிருந்ததால் மன்னிப்பு கோருகின்றேன். அதேபோல் அக்காலப்பகுதியில் இவ்விடயதானம் தொடர்பில் அமைச்சராக இருந்தவர்கள் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.
கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை புதைப்பதால் நிலத்தடி நீருக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது. நீர்வளம் மாசுபடாது என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டி இருந்தபோதிலும், விஞ்ஞானப்பூர்வமான விடயங்களைக் கருத்திற்கொள்ளாமல் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டது.
நான் அமைச்சராக பதவியேற்ற பின்னர் மேற்படி திட்டம் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டது. துறைசார் நிபுணர்களால் தவறான கொள்கையே கடைபிடிக்கப்பட்டுள்ளது என ஆய்வுகள் தெரிவித்தன.
எனவே, முஸ்லிம் மக்களிடம் அரசு முறையாக மன்னிப்பு கோர வேண்டும் என்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும்.” – என்றார்.