இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்கள் தாயகம் திரும்பினர்: மூன்று மாதங்களில் 128 பேர் கைது

OruvanOruvan

Indian fishermen

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 இந்திய மீனவர்கள் விடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் நேற்று (03) புதன்கிழமை இந்தியாவுக்கு மீள அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றின் மூலம் இந்த விடயம் தெரியவருகிறது.

இலங்கை மற்றும் இந்தியா இடையிலான உறவில் மீனவர் பிரச்சினை பாரிய செல்வாக்கு செலுத்திவருகிறது.

எல்லைதாண்டி சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை இரு நாடுகளும் கைது செய்து வருவதுடன், படகுகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 23 இந்திய இழுவைப் படகுகளை கைப்பற்றியுள்ள இலங்கை கடற்படையினர் 128 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளது.

அத்துடன், கடந்த 2023 ஆம் ஆண்டில், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 240 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 35 இழுவைப் படகுகளை கடற்படை பறிமுதல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.