“யானை சின்னத்தில் போட்டியிட்டால் ஆதரவு வாபஸ்“: பிரசன்ன எச்சரிக்கை

OruvanOruvan

ஜனாதிபதித் தேர்தலை ஆண்டின் இறுதிக் காலாண்டில் நடத்த அரசாங்கம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

அதற்கான கலந்துரையாடல்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஆளுங்கட்சியும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நிலையில், வேட்பாளர் யார் என்பது தொடர்பில் இதுவரை ஆளுங்கட்சிக்குள் இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை.

என்றாலும், ஐ.தே.க மற்றும் பொதுஜன பெரமுன தலைமையில் பரந்தப்பட்ட கூட்டணியொன்றை அமைக்க ரணில் விக்ரமவிங்க பேச்சுகளை நடத்தி வருவதுடன், குறித்த கூட்டணியின் பொது வேட்பாளராக களமிறங்கவும் அவர் தமது விரும்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

என்றாலும், ஆளுங்கட்சிக்குள் ரணிலை வேட்பாளராக களமிறக்க சிலர் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவும் வேட்பாளர் விடயத்தில் இறுதி தீர்மானத்தை எடுப்பதில் தடுமாற்றத்தை சந்தித்துள்ளார்.

இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் யானைச் சின்னத்தில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட முற்பட்டால் தாம் வழங்கும் ஆதரவை வாபஸ் பெறுவேன் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எச்சரித்துள்ளார்.

”யானைச் சின்னமோ, மொட்டு சின்னமோ அல்ல, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுச் சின்னத்தில் தேசிய வேட்பாளராக ரணில் போட்டியிட வேண்டும்.

ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டுமாயின் அவருக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு அவசியமாகும்.

நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்து கட்சிக்குள் எந்தவொரு கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை. அத்தகைய பதவியைப் பெற அதிக அனுபவம் தேவை. நாமல் ராஜபக்ச ஒரு இளைஞன்.

அவர் ஜனாதிபதியாக வர இன்னும் நேரம் உள்ளது. இந்த ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்தினால் நான் அவருக்கு உதவ மாட்டேன்.

பொதுஜன பெரமுனவில் சுமார் 80 வீதமானவர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான கருத்து தெரிவித்து வருகின்றனர்.” என்றார்.