கோடிக்கணக்கு பெறுமதியான விதை உருளைக்கிழங்குகள் எரியூட்டல்: கஜேந்திரனின் கோரிக்கையை ஏற்ற வடக்கு ஆளுநர்

OruvanOruvan

யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட இருந்த ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான விதை உருளைக்கிழங்குகள் பழுதடைந்த நிலையில் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில், உருளைக்கிழங்கு பழுதடைந்த விவகாரம் தொடர்பில் மாகாண மட்ட விசாரணைக் குழுவை அமைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், வடமாகாண ஆளுநரிடம் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலக வங்கியால் விவசாய நவீனமயமாகல் செயல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட உருளைக்கிழங்கு செய்கையாளர்களுக்கு வழங்கப்பட இருந்த விதை உருளைக்கிழங்குகள் கிருமித் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.

மனிதனுக்குத் தீங்கை விளைவிக்கக் கூடிய ஆபத்தான நுண்ணங்கிகள் காணப்படுவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியதையடுத்து அவற்றினை மண்ணுக்குள் புதைத்தால் ஆபத்து ஏற்பாடும் என்பதால் எரியூட்டப்பட்டன.

அதன் தொடர்ச்சியாகவே யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கேள்விகளை எழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.