தெற்காசியாவிலேயே மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலை: ஜனாதிபதி திறந்து வைப்பு
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் நவீனமயப்படுத்தாது நாட்டின் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
காலி கராபிட்டியவில் நிர்மாணிக்கப்பட்ட “ஜேர்மன் – இலங்கை நட்புறவு புதிய பெண்கள் வைத்தியசாலை”யை மக்களின் பாவனைக்காக ஜனாதிபதி நேற்று புதன்கிழமை திறந்து வைத்தார்.
தெற்காசிய வலயத்தின் மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலையாகவும் இது கருதப்படுகின்றது.
இதன்போது கருத்துரைத்த ஜனாதிபதி
“மூன்றரை தசாப்தங்களுக்கு மேலாக கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக போதிய மூலதனச் செலவுகள் வழங்கப்படவில்லை.இந்த வருடத்திலிருந்து கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக அதிக மூலதனச் செலவுகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆறு மாடிகளைக் கொண்ட இந்த வைத்தியசாலை 640 படுக்கைகள், 6 அறுவை சிகிச்சை நிலையங்கள், அவசர சிகிச்சை பிரிவுகள், தீவிர சிகிச்சை பிரிவுகள், ஆய்வகங்கள், சிசு தீவிர சிகிச்சை பிரிவுகள், விசேட குழந்தை பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து நவீன மருத்துவ வசதிகளையும் கொண்டுள்ளது.
கழிவுநீரைச் சுத்திகரித்து வெளியேற்றும் பிரிவும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் முன்னாள் சான்சலர் ஹெல்மட் கோல், சுனாமி அனர்த்தத்தினால் தென் மாகாணத்தில் மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலையான காலி மகமோதர வைத்தியசாலைக்கு ஏற்பட்ட சேதத்தை பார்த்துவிட்டு புதிய மகப்பேற்று வைத்தியசாலையை அமைக்க முன்வந்தார்.
வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்காக ஜெர்மன்அரசாங்கம் 25 மில்லியன் யூரோக்களை( சுமார் 357 கோடி ரூபா) வழங்கியிருந்தது. வைத்தியசாலைக்கான செலவுகளில் ஒரு பகுதி நன்கொடையாகவும்,மற்றைய பகுதி இலகுக் கடனாகவும் கிடைத்துள்ளது” என கூறியுள்ளார்.
புதிய மகப்பேறு வைத்தியசாலையை திறந்து வைத்ததையடுத்து நவீன சத்திர சிகிச்சை நிலையங்கள் உள்ளிட்ட வசதிகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.