அனுரவின் வெளிநாட்டு பயணங்கள்: புலனாய்வுத் துறையின் தகவல்களால் அதிர்ச்சியில் அரசாங்கம்
![Oruvan](https://gumlet.assettype.com/oruvan/2024-03/50c8f42c-ff22-442a-bf55-ec6ff32e46c1/AKD240321.jpg?format=webp&w=800&q=70)
![Oruvan](/site-related-assets/no-image.webp)
இலங்கைத் தீவின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தலில்களில் ஜனாதிபதித் தேர்தல் பிரதானமானது.
எதிர்வரும் ஒக்ரோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சரவையில் கூறியுள்ளதுடன், தேர்தலுக்கு தயாராகுமாறு அமைச்சர்களுக்கும் கட்டளையிட்டுள்ளார்.
பிரதான எதிர்க்கட்சிகளாக கருதப்படும் ஐக்கிய மக்கள் சக்தியும், தேசிய மக்கள் சக்தியும் தீவு முழுவதும் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளன.
இதற்கு ஒருகட்டம் மேல் சென்று புலம்பெயர் இலங்கையர்கள் வாழும் நாடுகளில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது தேசிய மக்கள் சக்தி.
அவுஸ்ரேலியா, இத்தாலி, இந்தியா, சீனா உட்பட பல நாடுகளில் தேசிய மக்கள் சக்தி மக்களின் ஆதரவை திரட்டி வருகிறது.
இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, கனடாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதுடன், அங்கு தமிழ், சிங்கள மக்களுடன் பல்வேறு ஆதரவு திரட்டும் சந்திப்புகளில் ஈடுபட்டு வருகிறார்.
‘‘புலம்பெயர் நாடுகளில் தேசிய மக்கள் சக்தி நடத்திவரும் இந்த சந்திப்புகளால் அரசாங்கம் பெரும் அச்சமடைந்துள்ளது.
இவர்கள் நடத்தும் சந்திப்புகளால் மக்கள் ஆதரவு அவர்களுக்கு பெருகி வருவதாக புலனாய்வுப் பிரிவு அரசாங்கத்துக்கு அறிக்கையொன்றை கையளித்துள்ளது‘‘ என அனுரகுமார திஸாநாயக்க கனடாவில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கூறியுள்ளார்.
இதனால், இந்த வரலாற்று சந்தர்ப்பத்தை இலங்கையர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தமது உறவுகளை தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்குமாறு கோர வேண்டும் எனவும் அனுரகுமார, கனடாவாழ் புலம்பெயர் இலங்கையர்களிடம் கோரியுள்ளார்.