அதிகரிக்கும் வாழ்க்கை செலவினம்: மன அழுத்தத்தில் பொது மக்கள்
கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கைத்தீவானது தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகளுடன் காணப்படுகிறது.
இதற்கான தீர்வை தேடுவதற்கான பல முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வந்தாலும் வாழ்க்கை செலவினத்தை தாங்கிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவு , வரி சுமை , உர பிரச்சினை , மின் கட்டண அதிகரிப்பு , இளைஞர்களுக்கான வேலையின்மை , மனித உரிமை மீறல்கள் போன்ற பிரச்சினைகளால் பொது மக்கள் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.
உணவுத் தேவைகளை நிவர்த்தி செய்தல் , குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்புதல் , மாதாந்த கட்டணங்களை செலுத்துதல் போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியினால் மன அழுத்தம் , நோய் நிலைமைகள் அதிகரித்தல் போன்ற காரணங்களால் நாட்டில் 10 பேரில் 6 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக வழிகள் மற்றும் வழிமுறைகளுக்கான நாடாளுமன்றக் குழுவில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
இன்னும் சில தினங்களில் 10 பேரில் 8 பேர் எனும் விதத்தில் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் குறித்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இதேவேளை , வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, இடைப்பட்டவர்கள் 300 வீதமான இலாபத்தை பெற்றுக்கொள்வதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
பொருட்களின் விலை அதிகரிப்பே இதற்கான முக்கிய காரணம் எனவும் குழு சுட்டிக்காட்டியுள்ளது.