மைத்திரி குண்டுவெடிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றாரா?: சந்தேகம் வெளியிட்டார் பிள்ளையான்

OruvanOruvan

Pillaiyan

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றாரா?என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) குறிப்பிட்டுள்ளார்.

எனவே மைத்திரிபால, துணிந்து நேர்மையான அரசியல் தலைவராக இருந்தால் குற்றவாளிகள் யார் என்பதை வெளிப்படையாக விரைவாக ஊடகங்களில் வெளிப்படுத்த வேண்டும் என்பது தமது கோரிக்கை என பிள்ளையான் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் எழுதிய “ஈஸ்டர் படுகொலை இனமத நல்லிணக்க அறிதலும் புரிதலும்“எனும் வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு அஞ்சனா மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடாத்தியவர்களை தமக்கு தெரியும் என தெரிவித்த கருத்தை நான் ஊடகங்களில் பார்த்தேன். ஒரு சாதாரன மனிதனைபோல முன்னாள் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன பேசுகின்றார்.

இந்த குண்டு வெடிப்பு இடம்பெறுகின்ற போது அவர் நாட்டின் தலைவராக இருந்தார். தலைவருடைய பொறுப்பு யாராக இருந்தாலும் தேடி கண்டுபிடித்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் அவர் அதைவிட்டுவிட்டு இப்போது இரகசிய வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என கருத்துக்களை சொல்லுகின்றார். எனவே ஒரு வேடிக்கையான மனிதரை இந்த நாட்டு அரசியலுக்கு கொண்டுவந்துள்ளோம் என்பதையிட்டு நாங்கள் வெட்டகப்படவேண்டும்.

ஏன் அவர் இரகசிய வாக்குமூலம் தேவை என்கின்றார். என்னத்திற்கு யாருக்கு அச்சப்படுகின்றார். அப்படியென்றால் இந்த குண்டு வெடிப்பிற்கும் அவரும் ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றாரா? என்ற சந்தேகம் எங்களுக்கு உண்டு. ஆகவே அவர் ஒரு துணிந்த நேர்மையான அரசியல் தலைவராக இருந்தால் யார் என்பதை வெளிப்படையாக விரைவாக ஊடகங்களில் வெளிப்படுத்த வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.