இந்தியத் துணைத்தூதரகம் முற்றுகை: மீனவர்கள் அழுத்தம்
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தினை முற்றுகையிட்டு மாவட்ட கடற்றொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துவருகின்றனர்.
இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைமடி தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் கடற்றொழிலாளர்களை சுமூகமான நிலைக்குள் கொண்டுவர முயற்சித்த போதும், கட்டுப்பாட்டுக்குள் அடங்காமல் மீனவர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மை காலமாக தொடர்ச்சியாக தமது வளங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் இதனை தடுத்து நிறுத்துமாறு கோரி கடற்றொழிலாளர்கள் இவ்வாறு தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முதலமைச்சர்கள் இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் பிரச்சினைகள் தொடர்பில் என்னுடன் கலந்துரையாடியுள்ளனர்.
முதலமைச்சர்களைச் சந்தித்து கலந்துரையாடுவது தொடர்பிலும் ஒரு சூழல் உருவாகி வருகின்றது. எனவே வடக்கின் கடற்றொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (21) இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.