தமிழ் மீனவர்கள் 'உண்ணாவிரதம்': வடக்கின் கடல் வளம் சூறையாடப்படுவதாக குற்றச்சாட்டு
![Oruvan](https://gumlet.assettype.com/oruvan/2024-03/1dcc7e00-1f13-4da6-85f7-d2fc04ee70a3/bd2f7d5c_05c6_4ff9_a271_e63153508f6b.jpeg?format=webp&w=800&q=70)
![Oruvan](/site-related-assets/no-image.webp)
Tamil fishermen on 'fasting'
இந்திய மீனவர்களின் அத்துமீறலால், வடமாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து, தொடர் போராட்டங்களை முன்னெடுத்தபோதிலும், அதற்கு உரிய பதில் கிடைக்காத நிலையில் தமிழ் மீனவர்கள் குழுவொன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து, யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரிக்கு முன்பாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று 19ஆம் திகதிஆரம்பித்துள்ளனர்.
இந்திய மீனவர்களை தடுப்பது கடினம் என இலங்கை கடற்படைத் தளபதியும் தெரிவித்துள்ள நிலையில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் இன்றும் (மார்ச் 20) தொடர்கின்றது.
பொறுப்புக்கூறும் அதிகாரி வந்து தமது பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதியளிக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள யாழ்ப்பாணம் மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனத்தின, செயலாளர் செபமாலை அன்டன் செபராசா வலியுறுத்தியுள்ளார்.
![Oruvan](https://gumlet.assettype.com/oruvan/2024-03/8522ac51-35e1-4a43-a458-be6b658c2213/3d79b121_8990_4a88_b858_d7bfe789b613.jpeg?format=webp&w=1000&q=80)
![Oruvan](/site-related-assets/no-image.webp)
“உண்ணாவிரத போராட்டத்தை, நிச்சயமாக இதுல சாகும்வரை இருந்தே ஆகுவோம். எங்களுக்கு சரியான ஒரு தீர்வு வேணும். சரியான முடிவு வரும் வரைக்கும் அது யாராகவும் இருக்கலாம். எங்கட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இங்க வந்து சந்திக்க விரும்பினால் சந்திக்கலாம். ஆனால் அவர்கள் எங்களுக்காக எந்தவொரு இடத்திலும் குரல் கொடுத்ததாக தெரியவில்லை. கடற்றொழில் அமைச்சராக இருந்தாலும் சரி. எங்கட ஜனாதிபதியாக இருந்தாலும் சரி அல்லது இந்த நாட்டின் யாரோ பொறுப்பான தலைவர் வந்து எங்களுக்கு சரியான உறுதிமொழி வழங்கும்வரையில் இந்த இடத்தில் இருந்து எழும்பமாட்டோம் என்பதை உறுதியாக கூறிக்கொள்கின்றோம்.”
யாழ்ப்பாணம் மருதடி சந்தியில் இருந்து யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகராலயம் வரை ஆர்ப்பாட்ட பேரணியாக வந்த யாழ்ப்பாண மீனவர்கள் அங்கு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதோடு பின்னர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
துணை உயர்ஸ்தானிகராலயத்திற்கு அருகில் உண்ணாவிரதத்தை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அருகில் அமைந்துள்ள புனித ஜோன் பொஸ்கோ கல்லூரிக்கு முன்பாக உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க மீனவர்கள் நடவடிக்கை எடுத்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
![Oruvan](https://gumlet.assettype.com/oruvan/2024-03/ec4a83ff-1907-4bb2-8ac4-edc9a07e97a6/9ef47975_47fc_491f_9ae5_6be88ba5b010.jpeg?format=webp&w=1000&q=80)
![Oruvan](/site-related-assets/no-image.webp)
இந்திய மீனவர்கள் வடக்கு கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்த போதிலும் தமது பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.
இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் நூற்றுக்கணக்கான இந்தியக் கப்பல்களை 'அதிகளவான பலத்தை பயன்படுத்தி தடுக்க முடியாது.' என கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களின் கைது அரசியல் அழுத்தங்களுக்கும் வழிவகுக்கும் என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா கடந்த மார்ச் 16ஆம் திகதி தி ஐலன்ட் (The Island) பத்திரிகையுடனான செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.
"நூற்றுக்கணக்கான மீன்பிடி கப்பல்களை கைப்பற்றுவது நடைமுறையில் சாத்தியமில்லை. மேலும் இந்த கைதுகள் அரசியல் தாக்கங்களுக்கு வழிவகுக்கும். நாம் எல்லாவற்றையும் சிந்திக்க வேண்டும்."