முழுமையாக அபிவிருத்தி செய்யப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்: இணக்கம் வெளியிட்டுள்ள இந்தியா
இலங்கை இந்தியா இடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் இலங்கைக்கு நிதியுதவி வழங்குவதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் துறைமுகங்கள், கப்பல்துறை, விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய காங்கேசன்துறை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்த அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாரிய அளவிலான கப்பல்கள் மற்றும் படகுகள் துறைமுகத்திற்குள் நுழைவதற்கு ஏற்ற வகையில் 30 மீட்டர் ஆழப்படுத்தப்படவுள்ளதுடன், புதிய அலை தாங்கியை நிர்மாணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதிக அளவிலான இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவரவும், இலங்கை மற்றும் இந்தியா இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதன்போது தெரிவித்துள்ளார்.