பௌத்த பிக்குகளை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும்: சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக் குழு எச்சரிக்கை
![Oruvan](https://gumlet.assettype.com/oruvan/2024-03/521cbb34-4b9d-47b9-9440-73d4b0fbd82d/New_Project__5_.jpg?format=webp&w=800&q=70)
![Oruvan](/site-related-assets/no-image.webp)
பௌத்த பிக்குகளின் அரசியல் தலையீட்டை தடுக்காதவரை, வெடுக்குநாறிமலைச் சம்பவங்களை போன்ற சம்பவங்கள் தொடரும் என சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக் குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் எச்சரித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறிமலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று பூஜை வழிபாடுகளில் ஈடுபடச்சென்ற பக்தர்களுக்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், இரவு வேளையில் வழிபாடுகளைத் தொடர முற்பட்டோர் அங்கிருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
மேலும் ஆலயப்பூசகர் உட்பட எட்டு பேரை பொலிஸார் கைதுசெய்தனர்.
கைதானவர்கள் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டதுடன், குறித்த எட்டு பேருக்கும் எதிரான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனையடுத்து,இவ்விடயம் தொடர்பில் சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக் குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இவ்விடயத்தை வரவேற்கிறோம்.சட்டத்துக்கு மதிப்பளிக்குமாறு கொழும்பு அரசாங்கம் வலியுறுத்தும் வரையிலும், நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில் காணிகளை அபகரிப்பதையும், இன-மதப்பரவலை மாற்றியமைப்பதையும் இலக்காகக்கொண்டு இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இயங்கிவரும் பௌத்த பிக்குகளின் பேரரசியல் அபிலாஷைகளைத் தடுக்கும் வரையிலும் வெடுக்குநாறிமலை விவகாரத்தை போன்ற மோதல்கள் தொடர்ந்து அரங்கேறும் ” என அலன் கீனன் எச்சரித்துள்ளார்.