தவறான உறவில் குழந்தை பெற்று எரித்து கொலை செய்த பெண்: மத போதகர் உட்பட மூவர் கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் தவறான உறவின் குழந்தையை பிரசவித்து கொலை செய்துள்ள சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையை வீட்டில் பிரசவித்த பெண், பொலித்தீன் பையினால் சுற்றி கொலை செய்து புளியம்பொக்கணை பெரியகுளம் பகுதியில் எரித்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அவருடன் தொடர்பில் இருந்த மத போதகர் குழந்தையை எரிப்பதற்கு உதவி புரிந்ததாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதிக்கு இன்று புதன் கிழமை (19) சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் குறித்த சம்பவ இடத்தினை பார்வையிட்டார்.
குழந்தையை கொண்டு சென்று எரித்ததாக கூறப்படும் பகுதியில் இருந்து சில தடயப்பொருட்களை புதுக்குடியிருப்பு பொலிஸார் மீட்டுள்ளதாக நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தடய பொருட்களை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மத போதகர் உட்பட மூவர் கைது
குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணும், பெண்ணின் தாயாரும், மத போதகர் உட்பட மூவர் புதுக்குடியிருப்பு பொலிசாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பெண் (வயது-29) விசுவமடு இளங்கோபுரம் பகுதியிலுள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மிக ஒழுக்கம் மிக்க சமூகமாக இருந்த வன்னி மண்ணின் விடுதலைப்புலிகளின் காலத்துக்கு (2009) பின்னர் போதைப்பொருள் பாவனை மற்றும் சமூக சீர்கேட்டு சம்பவங்கள் மிகவும் அதிகரித்து வருவதோடு பாலியல் துஸ்பிரயோகம் தவறான உறவுகள் என சமூகத்தின் போக்கு மாறிவருகிறது.
எனவே மக்கள் விழிப்படைந்து எமது சமூகத்தின் மதிப்பை பாதுகாக்க முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.