நாடாளுமன்ற தேர்தல் நடாத்தப்பட்டால் நிதி நெருக்கடி ஏற்படும்: ஒருங்கிணைந்த நிதியில் பணம் ஒதுக்க முடியுமா?

OruvanOruvan

Election commission

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் நடாத்தப்பட்டால் மேலதிகமாக நிதி தேவைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, அரசாங்கம் மேலும் 11 பில்லியன் ரூபா நிதித் தொகையை திரட்ட வேண்டியிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2024ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்காக தேர்தல் ஆணைக்குழுவிற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் முதலில் நாடாளுமன்ற தேர்தல் நடாத்தப்பட்டால் மேலதிகமாக நிதி தேவைப்படும் என கூறப்படுகின்றது.

பொதுத் தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படாத நிலையில் இந்த வருடம் பொதுத் தேர்தல் இடம்பெறாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்க முடியும்.

அத்துடன் பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்ததன் பின்னர் செலவினங்களுக்காக ஒருங்கிணைந்த நிதியில் இருந்து பணம் ஒதுக்துவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

தற்போது, அரசாங்கத்தை நடத்துவதற்கு ஜனாதிபதிக்கு நாடாளுமன்ற ஆதரவை வழங்கி வரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுத் தேர்தலை வலியுறுத்துகிறது.

எவ்வாறாயினும், பொதுத் தேர்தலை நடாத்துவது தற்போதைய சூழலில் பொருத்தமற்றது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது.