update - சாணக்கியன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கோப் குழுவிலிருந்து விலகல்: புதிய தலைவருக்கு எதிர்ப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் நளீன் பண்டார ஆகியோரும் கோப் குழுவிலிருந்து பதவி விலகியுள்ளனர்.
தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் பதவி விலகியுள்ளனர்.
கோப் குழுவிலிருந்து மேலும் இருவர் விலகல்
கோப் குழுவில் இருந்து மேலும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகியுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் ஆகியோரே இவ்வாறு பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப் குழுவிலிருந்து தயாசிறி ஜயசேகர பதவி விலகல்
கோப் எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பதவி விலகியுள்ளார்.
அவர் தனது X தளத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
தயாசிறி ஜயசேகரவின் பதவி விலகல் கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன புதிய தலைவராக நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் பதவி விலகியுள்ளார்.
ஊழலை தவிர்க்குமாறு அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதற்கு நாடாளுமன்ற குழுக்களும் ஊழலற்றதாக இருக்க வேண்டும் என தயாசிறி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவும் கோப் குழு உறுப்புரிமையிலிருந்து விலகுவதாக நேற்று(18) அறிவித்திருந்தார்.