ஜனாதிபதித் தேர்தல் : சஜித் - அனுர இடையில் வலுவடையும் போட்டி: செல்வாக்கை இழந்துள்ள ரணில்

OruvanOruvan

ஜனாதிபதித் தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிவருவதால் தேர்தலில் யார் வெற்றிபெற போகிறார் என மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் அனுரவுக்கும் சஜித்துக்குமே கடுமையான போட்டி நிலவும் என வெளியாகும் சில கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கான மக்கள் ஆதரவு கணிசமாக அதிகரித்துள்ளதாக சுகாதார கொள்கைகள் மையம் கடந்த ஜனவரி மாதம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

புதிய கருத்துக் கணிப்பை கூறும் மரிகார்

இதன்படி, அனுரகுமார திஸாநாயக்கவிற்கான மக்கள் ஆதரவு 39 வீதமாகவும், சஜித் பிரேமதாசவுக்கு 27 வீதமாகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு 14 வீதமாகவும் இருந்தாக சுகாதார கொள்கைகள் மையம் தெரிவித்தது.

இந்த நிலையில் அண்மையில் நடத்தப்பட்டுள்ள கருத்துக் கணிப்பொன்றில் தேசிய மக்கள் சக்தியை முந்தி ஐக்கிய மக்கள் சக்தி முன்னிலை பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் குறிப்பிடுகிறார்.

கருத்துக் கணிப்பின்படி, ஐக்கிய மக்கள் சக்திக்கு 39 வீதமானவர்களும், தேசிய மக்கள் சக்திக்கு 20 வீதமான மக்களும் ஆதரவளித்துள்ளனர்.

24 வீதமான வாக்குகள் தீர்மானமிக்க வாக்குகளாக அமையும். ஆதரவை தீர்மானிக்காத வாக்காளர்கள் வெற்றிபெறும் அணிக்கே தமது வாக்குகளை செலுத்துவார்கள் என தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெளியாகும் எந்தவொரு கருத்துக் கணிப்புகளும் ஜனாதிபதிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என்பதையே வெளிப்படுத்துகின்றன.