தனது நிலைப்பாட்டை மாற்றிய சந்திரிகா: சுதந்திர கட்சியின் புதிய கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய கூட்டணியின் தலைமைத்துவத்தை பெற விருப்பம் தெரிவித்திருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தற்பேது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார் என தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளது.
இதன் காரணமாக உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து கடந்த சில நாட்களாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய கூட்டணி தொடர்பில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
அதேவேளை, சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் அண்மையில் கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றதுடன், இந்த நெருக்கடி நிலை குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது புதிய கூட்டணியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய முன்னேற்றம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அந்த கலந்துரையாடலில் மீண்டும் ஒருமுறை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.