கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபருக்கு எதிராக விசாரணை: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்...
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபருக்கு எதிராக விசாரணை
யாழ்ப்பாணம் - கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபருக்கு எதிராக கல்வி அமைச்சினால் விசாரணையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன நல்லிணக்கத்துக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டுவதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த இளைஞன் பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த கிளிநொச்சி பளையை சேர்ந்த இளைஞன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் கடந்த 11 ஆம் திகதி விபத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தலைக்கவசம் அணியாமை காரணமாக தலையில் காயம் ஏற்பட்டமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
வெடுக்குநாறிமலை சம்பவம் - மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு
வெடுக்குநாறிமலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட எட்டு பேரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில் இடம்பெறவுள்ளது.
வட்டுக்கோட்டை வாள்வெட்டு சம்பவம்-மேலும் ஒரு சந்தேகநபர் கைது
வட்டுக்கோட்டை வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபரிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பில் நான்கு கடற்படையினரிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடுக்குநாறிமலை விவகாரம்- ஜனாதிபதியை சந்திக்க தமிழ் கட்சிகள் தீர்மானம்
வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு தமிழ் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். எதிர்வரும் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட எட்டு பேரின் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில்,அதற்கு முன்னைய நாள் 18ஆம் திகதி திங்கட்கிழமையன்று ஜானாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
யாழ். வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து டிரான், தேசபந்து கலந்துரையாடல்
யாழ். மாவட்ட வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர், யாழ் மாவட்ட வர்த்தகர்களை சந்தித்து கலந்துரையாடி உள்ளனர்.
வடமத்திய மாகாண பதில் ஆளுனராக லக்ஷ்மண் யாப்பா நியமனம்
வடமத்திய மாகாண ஆளுனராக செயற்பட்ட மஹீபால ஹேரத், வௌிநாட்டுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.அதன் காரணமாகவே லக்ஷமண் யாப்பா, பதில் ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் பேசும் மக்களுக்காக அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்
தமிழ் பேசும் மக்களுக்காக அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை வவுனியாவில் ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 107 என்ற அவசர தொலைபேசி இலக்கம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடலுக்குள் நீராடச் சென்ற சிறுமி - சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் - சாட்டி கடலுக்குள் நீராடச் சென்ற சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த அவந்திகா விஜயகாந்த் என்ற 11 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான கட்டத்தில் நுரைச்சோலை அனல் மின்நிலையம்
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மின்சார சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மின் பொறியியலாளர்களின் பற்றாக்குறை காரணமாக நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.