அதிகாரத்தைப் பெறுவதற்காக வழங்கிய அரசியல் வாக்குறுதிகளால் மக்கள் பாதிப்பு: ரணில் சுட்டிக்காட்டு
![Oruvan](https://gumlet.assettype.com/oruvan/2024-03/c278932a-7811-4e1a-906b-778dcd1e5ba5/23_64c906587a01b.jpeg?format=webp&w=800&q=70)
![Oruvan](/site-related-assets/no-image.webp)
Ranil Speech
இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு விரைவாக ஏற்றுமதி பொருளாதாரத்திற்குத் திரும்ப வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் வருமானம் இல்லாத போது மக்களுக்கு இலவச நிவாரணம் வழங்க பணம் அச்சிடப்பட்டது. இதனாலேயே, வெளிநாட்டுக் கடனைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்லாமே இலவசமாகக் கொடுக்கப்பட்டது. இப்படி இலவசமாகக் கொடுப்பதுதான் பொருளாதாரம் வீழ்ச்சியடைய முக்கிய காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
யுனைடட் யூத் இளைஞர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த “இளைஞர் எமது எதிர்காலம்” என்ற சிநேகபூர்வ சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருந்தார்.
நாட்டின் பொருளாதாரம் பற்றிய உண்மையைப் புரிந்து கொள்ளாமல், அதிகாரத்தைப் பெறுவதற்காக வழங்கிய அரசியல் வாக்குறுதிகளினால் நாட்டு மக்கள் பாதிக்கப்படைந்துள்ளனர் எனவும், அந்தத் தவறை செய்ய தான் தயாராக இல்லை எனவும், நாட்டுக்கு சாதகமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் பாடுபட வேண்டும் எனவும் ரணில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அரசாங்கம் என்ற ரீதியில் மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கும் போது, மக்களிடம் பணம் செலுத்தும் திறன் ஏற்படும். அவ்வாறு பணம் செலுத்தும் திறன் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு புதிய திட்டத்தை செயற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.