தபால் திணைக்களத்தின் பெயரில் மோசடி: பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

OruvanOruvan

குறுஞ்செய்திகள் ஊடாக தபால் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபோன்ற குறுஞ்செய்திகளுக்கு மக்கள் தங்களின் இரகசிய தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு தபால் திணைக்களம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை தபால் திணைக்களம் மூலம் வழங்கப்படும் பொதிக்கான கட்டணத்தை செலுத்துமாறு பொதுமக்களுக்கு போலியான குறுஞ்செய்தி அனுப்பி வங்கி அட்டை தரவு திருட்டு மோசடி இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

இலங்கை தபால், இலங்கை தபால் திணைக்களம், SL POST, Sri Lanka Post போன்ற பெயர்களைப் பயன்படுத்தியும் இலங்கை தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பயன்படுத்தியும் இந்த மோசடி மேற்கொள்ளப்படுகிறது.

வங்கி அட்டை தகவல்களை குறுஞ்செய்திகள் மூலம் தனது திணைக்களம் ஒருபோதும் கோராது என்றும் வங்கி அடைகள் மூலம் பொதிகள் தொடர்பான எந்தவொரு பரிவர்த்தனையையும் மேற்கொள்ளாது என்றும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பான கூடுதல் தகவல்களைக் கேட்க விரும்பினால், அஞ்சல் துறையின் துரித இலக்கமான 1950, தகவல் தொழில்நுட்பப் பிரிவின் 011 2542104, 011 2334728, 0112335978, 011 2687229, 011 2330072 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.