முகமாலையில் தொடரும் அவலம்: பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த அரச பேருந்துக்கு மக்கள் செய்த சிறப்பான வேலை
![Oruvan](https://gumlet.assettype.com/oruvan/2024-03/a0899e5d-17d2-4ca6-a98d-2c38ace86bf4/1000132327_01.jpeg?format=webp&w=800&q=70)
![Oruvan](/site-related-assets/no-image.webp)
Government Bus
கிளிநொச்சி - முகமாலை பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றாது அரச பேருந்துகள் பயணித்த நிலையில், பெற்றோர் ஒருவர் பேருந்தை குறுக்காக இடை நிறுத்தி மாணவர்களை ஏற்றி அனுப்பி வைத்த சம்பவம் இன்று பதிவானது.
இந்த பிரச்சினை நீண்ட காலமாக காணப்படுகிறது.
இதனால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய நேரத்துக்கு போக முடியாத சூழல் காணப்படுவதாகவும், சில சமயங்களில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாமல் புறக்கணித்த சூழலும் காணப்பட்டதாக சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்நிலையில், இன்றும் காலை 7.40 வரை சென்ற எந்தவொரு பேருந்தும் பாடசாலை மாணவர்களை ஏற்றாது பயணித்துள்ளது.
இதனை அடுத்து பெற்றோர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை பேருந்துக்கு குறுக்காக நிறுத்தி மாணவர்களை ஏற்றி அனுப்பி வைத்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த பிரச்சினையானது, எழுதுமட்டுவாள் தொடக்கம் இயக்கச்சி வரையான சுமார் 8க்கு மேற்பட்ட பிரதேசங்களில் காணப்படுகிறது.
![Oruvan](https://gumlet.assettype.com/oruvan/2024-03/ecf713d3-5b3e-4d51-903c-c1f9af41a701/1000132326_01.jpeg?format=webp&w=1000&q=80)
![Oruvan](/site-related-assets/no-image.webp)
Government Bus
7.30க்கு பாடசாலைகள் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிலையில், இவ்வாறு மாணவர்கள் பிந்தி செல்லுதல் மற்றும், செல்லாதுவிடல் காரணமாக பல்வேறு பிரச்சினைகளிற்கு முகம் கொடுக்கின்றனர்.
மன உலைச்சலுக்கு மாணவர்கள் ஆளாவதுடன், கல்வியில் ஆர்வம் காட்டுதல் மற்றும் பூரண கல்வியை பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அத்துடன், பாடசாலை இடைவிலகலுக்கும் உந்துதலை கொடுக்கும் அபாயமும் காணப்படுகிறது.
மாணவர்களின் கல்வி மற்றும் இணை செயற்பாடுகளிற்கு ஊக்கமளிக்கும் வகையில், அந்த பிரதேச மாணவர்களின் போக்குவரத்தினை சீர் செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு அனைத்து தரப்பினரிடமும் உள்ளது.
இவ்விடம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் நேரடியாக தலையீடு செய்து, உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர்.