இலங்கையில் தலைமறைவான குற்றவாளி: பல ஆண்டுகளின் பின் மதம் மாறிய நிலையில் கைது

OruvanOruvan

மட்டக்களப்பில் இரண்டு சிறுவர்களைச் சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் இருந்து தப்பித்து தலைமறைவாக இருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள திருப்பெருந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய குறித்த நபர் நாவற்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்பிள்ளைகளின் தாய் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

மனைவியின் இரு சிறுவர்களை அடித்து சித்திரவரை செய்த குற்றச்சாட்டில் 2009 ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி உள்ளார்.

மட்டு உயர் நீதிமன்றில் கடந்த 2016-2-25 ம் திகதி குறித்த நபரை குற்றவாளி என இனங்கண்டு கொண்ட நீதிமன்றம் அவருக்கு 5 வருட சிறைத்தண்டனையும் 20 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறும் உத்தரவிட்டது.

தண்டப்பணத்தை 3 மாதத்தில் செலுத்த தவறின் 3 மாதங்கள் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட இரு சிறுவர்களுக்கும் தலா ஒரு இலச்சம் ரூபா வீதம் 2 இலட்சம் ரூபாவை செலுத்துமாறும் அதனை செலுத்த தவறின் 2 வருட சிறைத்தண்டனையும் வழங்கி அவருக்கு திறந்த பிடியாணை பிறப்பித்திருந்தது.

குறித்த நபர் தொடர்பாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய நீதிமன்ற பிடியாணை பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் சார்ஜன் அரசரட்ணம் கோகுலன், பொலிஸ் கான்ஸ்டபிள் தேவா ஆகியோர் மேற்கொண்ட விசாரணையில் குறித்த நபர் பாதிக்கப்பட்ட சிறுமிகள் உட்பட குடும்பத்துடன் முஸ்லீம் மதத்திற்கு மதம் மாறி அங்கு ஹுசைன் என பெயரை மாற்றி பொலன்னறுவையில் வசித்துவந்துள்ளதை கண்டறிந்தனர்.

இதனையடுத்து பொலிஸ் சார்ஜன் அரசரட்ணம் கோகுலன் குறித்த குற்றவாளியுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு சாமத்தியமாக பேசி நேற்று திங்கட்கிழமை (11) பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து கைது செய்துள்ளார்.

கைது செய்யப்பட்டவரை செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.