'அவர்களை சுட்டுக் கொன்றுவிடுங்கள்': துரத்தப்பட்டமை சதி அல்ல - கோட்டா வடிகட்டின முட்டாள் என்கிறார் விக்கி

OruvanOruvan

"போர்க் காலத்தின் போதும், அரசியலில் ஈடுபட்ட காலத்தின் போதும் கோட்டாபய ராஜபக்‌ஷ துஷ்டனாகவே வாழ்ந்து வந்துள்ளார்.

துஷ்டர் ஒருவரை சிங்கள இளைஞர், யுவதிகள் பதவியில் இருந்து நீக்கினார்கள் என்பதுதான் உண்மை. அது சதி அல்ல. தண்டனை. அடித்துத் துரத்தப்பட வேண்டிய ஒருவர் என்று சிங்கள மக்களால் அடையாளம் காணப்பட்ட ஒருவரே அவர்களால் விரட்டப்பட்டார்."

- இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்.

'வாரத்துக்கொரு கேள்வி' என்ற தமது பதிவில் தாம் வெளியிட்ட செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

அந்தக் கேள்வி - பதில் விவரம் வருமாறு:-

கேள்வி:- வெளிநாட்டு - உள்நாட்டு சதியின் விளைவே தாம் பதவியிலிருந்து நீங்கியமை என்று முன்னைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கூறுகின்றாரே! உங்கள் கருத்து என்ன?

பதில்:- துஷ்டர்களைக் கண்டால் தூர விலகுவது நாம் காலம் காலமாக செய்து வரும் ஒரு செய்கையாகும். போர்க் காலத்தின் போதும் அரசியலில் ஈடுபட்ட காலத்தின் போதும் கோட்டாபய துஷ்டனாகவே வாழ்ந்து வந்துள்ளார்.

'அறகலய'வில் பங்கு பற்றியோர் சிங்கள இளைஞர்களே

இராணுவத்தினர் கைவசம் அன்று இருந்த பல இடங்களில் இன்று இறந்தவர்களின் மனித எலும்புகளும் எலும்புக்கூடுகளும் நிலத்திலிருந்து வெளிவருகின்றன.

உண்மையான சர்வதேச விசாரணை ஒன்று நடைபெற்றால் சரணாகதி அடைந்தவர்கள் எவ்வாறு, யாரின் கட்டளைக்கமைய காணாமல் போனார்கள் என்ற விடயம் வெளிவந்துவிடும்.

தமது வீழ்ச்சிக்குத் தமிழர்களையும் முஸ்லிம் மக்களையும் மறைமுகமாகக் குற்றஞ்சாட்டும் கோட்டாபய 'அறகலய'வில் பங்கு பற்றியோர் 99 சதவிகிதமானோர் சிங்கள இளைஞர்களே என்பதை மறந்துவிடக்கூடாது.

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு நடைபெற முன், எவ்வளவு காலமாக, யாருடன் கூட்டு சேர்ந்து குறித்த சம்பவம் நடைபெற பதவியில் இருந்த சிலர் பிரயத்தனங்களில் ஈடுபட்டனர் என்பது ஒரு சர்வதேச விசாரணை நடந்தால் வெளிவந்துவிடும்.

கோட்டாபயவின் முட்டாள்தனமான பொருளாதார கொள்கை

இந்தச் சம்பவத்தால் அரசியல் இலாபம் பெற்ற சிங்கள நபர் யார் என்பதை விசாரணை எளிதாகக் காட்டிக் கொடுத்துவிடும். சர்வதேச விசாரணைகள் இங்கு நடைபெறக்கூடாது என்று இன்று பதவியில் உள்ளவர்கள் கூறுவது உண்மைகள் வெளிவந்துவிடாது தடுப்பதற்கே

என் நண்பர் சட்டத்தரணியும் பத்திரிகையாளருமான லசந்த விக்கிரமதுங்க எவ்வாறு, ஏன் கொலை செய்யப்பட்டார், பின்னணியில் இருந்தவர்கள் யார் என்று சர்வதேச விசாரணை நடந்தால் எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள்.

கோட்டாபயவின் பங்கு என்ன என்பதையும் சர்வதேச விசாரணை காட்டிக் கொடுத்துவிடும். வெளிநாட்டவர்கள் மற்றும் உள்நாட்டவர்கள் தமக்கெதிராகச் சதி செய்தார்களா என்பதை கோட்டாபய தன்னிடமே விசுவாசத்துடன் கேட்டால் தன் செயல்களே தனது வீழ்ச்சிக்குக் காரணம் என்பதைப் புரிந்து கொள்வார்.

ஆனால் 'அறகலய' இளைஞர்,யுவதிகளை கிளர்ந்தெழச் செய்தது கோட்டாபயவின் முட்டாள்தனமான பொருளாதார நடவடிக்கைகளே.

அதிகாரம் இருந்தால் எவர் அறிவுரையையும் பொருட்படுத்தாமல் முட்டாள்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று உலகுக்கு எடுத்துக் காட்டியவர் கோட்டாபயவே.

'அவர்கள் யாவரையும் சுட்டுக் கொன்றுவிடுங்கள்'

துஷ்டர் ஒருவரை சிங்கள இளைஞர், யுவதிகள் பதவியில் இருந்து நீக்கினார்கள் என்பதுதான் உண்மை. அது சதி அல்ல. தண்டனை. மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.

அவ்வாறு நிறுத்தப்படுவது அவரின் இந்த நூல் தடுக்கும் என்று கோட்டாபய நினைத்தாரானால் மனோ கணேசன் கூறியமை போல் அவரைப் போல் வடிகட்டின முட்டாள் ஒருவர் இந்நாட்டில் இருக்க முடியாது.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்ட போது, இராணுவ சிங்கள நண்பர்களுடன் எம்மவர் சிலர் பேச நேர்ந்தது.

அவர்கள் கூறிய கூற்று அந்த காலகட்டத்தில் எனக்கு பாரிய அதிர்ச்சியைத் தந்தது. அரசின் கோரிக்கையின் பேரில் வெள்ளைக் கொடிகளைக் கையில் ஏந்தி சரணடைந்த தமிழ் மக்களை என்ன செய்ய வேண்டும் என்று முல்லைத்தீவு படையணியினர் வினவிய போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய சற்றும் சிந்தியாது 'அவர்கள் யாவரையும் சுட்டுக் கொன்றுவிடுங்கள்' என்று கட்டளை இட்டார் என்று அந்த இராணுவ அதிகாரிகள் கூறினர். என்றார்.