வெடுக்குநாறி ஆலய வளாகத்தில் குழப்பம்: கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்
கைதானவர்களுக்கு விளக்கமறியல்
வெடுக்குநாறி சிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தில் கைது செய்யப்பட்டவர்களை எதிர்வரும் செவ்வாய் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கஜேந்திரன் எம்.பி பயணித்த உழவு இயந்திரம் விபத்து
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்திற்கு குடிநீர்கொண்டு சென்ற வாகனம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட மூன்று பேர் காயங்களுக்குள்ளான நிலையில், ஒருவர் நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்திற்கு வருகை தந்த மக்களுக்கு குடிநீர் வழங்க பொலிஸார் மறுப்பு தெரிவித்ததையடுத்து அங்கு பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர் குடிநீருடன் உழவு இயந்திரத்தில் ஆலயத்திற்கு வருகைத்தந்த போது வாகனம் தடம் புரண்டதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 3 பேர் விபத்துக்குள்ளாகினர்.
இதில் காயங்கள்கான ஒருவர் நெடுங்கேணி வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், பொதுமக்களின் நலனில் அக்கறையின்றி பொலிஸார் குடிநீர்தாங்கியை திறந்து நீரை வெளியேற்றியிருந்ததாகவும் எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
வெடுக்குநாறி மலை பதற்றம்; கஜேந்திரன் எம்.பி.யை தூக்கிச் சென்று ஆலய முன்றலில் போட்ட பொலிஸார்
வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் நேற்றிரவு (08) இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அத்துடன், பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி உற்சவம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் மாலை ஆறு மணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டு வருமாறும், பொலிஸாரின் கட்டளையை மீறும் பட்சத்தில் குறித்த நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
எனினும், ஆலய நிர்வாகத்தினர் பூஜை நிகழ்வுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்த நிலையில் அன்னதானம், பொங்கல் மற்றும் பூஜை பொருட்களை என சுமார் 10 இலட்சம் பெறுமதியான பொருட்களை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர்.
இதன் காரணமாக பூஜை வழிபாடுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கலகம் அடக்கும் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆலயத்தில் குவிக்கப்பட்டதுடன், சப்பாத்துக்களுடன் ஆலயத்திற்குள் புகுந்த பொலிசார் கலந்து கொண்ட பெண்களையும் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
இதன்போது ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட வழிபாடுகளில் கலந்து கொண்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதும் தாக்குதல் மேற்கொண்டு பொலிசார் கைது செய்ய முயன்றதுடன், அவர் பாராளுமன்ற உறுப்பினர் என தெரியவந்ததையடுத்து தூக்கிச் சென்று ஆலய முன்றலில் போட்டு விட்டு சென்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வெடுக்குநாறி மலையில் வழிபாட்டில் ஈடுபட்ட கஜேந்திரன் உட்பட ஆறுபேர் கைது
வெடுக்குநாறி மலையில் வழிபாட்டில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட ஆறு பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
என்றாலும், கைதுசெய்யப்பட்டு சில நிமிடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை விடுவித்துள்ள பொலிஸார் ஏனையோரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
வெடுக்குநாறி மலையில் இரவு 6 மணிக்கு மேல் யாரையும் தரித்து நிற்க வேண்டாம் பொலிஸார் எச்சரிக்கை விடுத்திருந்த பின்புலத்திலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
வெடுக்குநாறி மலையில் இரவு தங்க பொலிஸார் தடை
வெடுக்குநாறி மலையில் இரவு 6 மணிக்கு மேல் யாரையும் தரித்து நிற்க வேண்டாம் எனவும் அவ்வாறு தரித்தால் கைது செய்ய நேரிடும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்ளச்சென்ற பக்தர்களுக்கு பொலிஸாரால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது கைது செய்யவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களை அகற்ற குறித்த மலை தொல்லியல் திணைக்களத்துக்கு சொந்தமானது என ஆரம்பத்தில் தெரிவித்த பொலிஸார் அதற்கான உரிய சான்றுகள் இல்லாத காரணத்தினால் இது வனவிலங்கு திணைக்களத்துக்கு உரியது என தெரிவித்துள்ளனர்.
வனவிலங்கு துறையின் அதிகாரிகளும் இதனை மறுத்தமையால் பொதுமக்கள் தொடர்ந்தும் அங்கு தரித்து நிற்கின்றனர்.
பொதுமக்கள் தொடர்ந்தும் தரித்து நிற்பதை தடுக்கும் நோக்கில் பொலிஸார் குறித்த தடையை விதித்துள்ளனர்.
இதேவேளை , கலகத் தடுப்பு பொலிஸாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐஸ்கிறீம் வியாபாரியை அகற்றிய பொலிஸார்
வெடுக்குநாறிமலையில் ஐஸ்கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரியினை பொலிஸார் அகற்றிய நிலையில், ஆலய வளாகத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.
சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்ளச்சென்ற பொதுமக்களுக்கு பொலிஸாரால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டது. தற்போது ஆலய வளாகத்தில் ஐஸ் கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரை பொலிஸார் விற்பனையில் ஈடுபட வேண்டாம் என தெரிவித்து ஆலயவளாகத்தை விட்டு அகற்றியுள்ளார். இதனால் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் குழப்பநிலை ஏற்ப்பட்டுள்ளது.
வெடுக்குநாறி பூசகர் பிணையில் செல்ல அனுமதி
வவுனியா - வெடுக்குநாறி ஆலய பூசகர் உட்பட நிர்வாகசபை உறுப்பினர் இருவரும் வவுனியா நீதவான் நீதமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் இருவரும் ஒரு இலட்ச ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிவராத்திரி பூஜைக்கான ஒழுங்கமைப்பில் ஈடுபட்டிருந்த வவுனியா வெடுக்குநாறி ஆலய பூசகர் உட்பட நிர்வாகசபை உறுப்பினர் ஒருவரும் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிட்டக்கது.