புகையிரத திணைக்கள வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது: இலங்கையின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...
இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்படவிருந்த புகையிரத திணைக்கள வேலைநிறுத்தம் கைவிடப்பட்டதாக லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பல்கலை மாணவர்களால் போராட்டத்தில் கண்ணீர் புகை தாக்குதல்
கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.
மின்சார வாகன இறக்குமதி அனுமதி: அமைச்சரவையின் புதிய தீர்மானம்
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு முழுமையாக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கும் திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த காலம் 2024 ஜூன் 30 வரை நீடிக்க முடிவு செய்யப்பட்டது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 2000 ரூபா சம்பளம் வேண்டும்
ஆயிரம் ரூபாவை வைத்து எப்படி வாழ்வது?. பெருந்தோட்டக் கம்பனிகளுடன் பேச்சு நடத்தி அரசு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும். 2000 ஆயிரம் ரூபா கிடைத்தால்தான் ஓரளவு சமாளிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகளை தாக்கிய ரயில்வே ஊழியர்கள்
பதுளை நோக்கி ரயிலில் பயணம் செய்த இரண்டு சுற்றுலாப் பயணிகளை ரயில்வே ஊழியர்கள் தாக்கியுள்ளனர்.இந்த சுற்றுலாப் பயணிகள் இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டை பெற்று முதல் வகுப்பில் பயணித்ததன் காரணமாக ஏற்பட் வாக்குவாதத்தை அடுத்து நாவலப்பிட்டி ரயில் நிலையத்தின் ஊழியர்கள், அவர்களை தாக்கி ரயிலில் இருந்து வெளியில் தள்ளியுள்ளனர்..
புகையிரத நிலைய கட்டிடங்களை அபிவிருத்திக்கு அனுமதி
கொழும்பு நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள பிரதான புகையிரத நிலையங்களின் கட்டிடங்களை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு
அமெரிக்க டெலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியான நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (05) மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு, விற்பனை பெறுமதி இன்று முறையே 303.04 ரூபாவாகவும், 312.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேல் மாகாணத்தில் 200 இலத்திரணியல் பஸ்கள் சேவையில் - அமைச்சர் பந்துல
மேல் மாகாணத்தில் எதிர்காலத்தில் நவீன வசதிகளுடன் கூடிய 200 இலத்திரணியல் பஸ்களை சேவையில் உட்படுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கந்தானை துப்பாக்கி சூடு சம்பம்; சந்தேக நபர் துப்பாக்கியுடன் கைது
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கந்தானையில் இறைச்சிக் கடை உரிமையாளரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இதன்போது, T56 ரக துப்பாக்கி, 02 மகசின்கள் மற்றும் 45 தோட்டாக்கள் என்பனவும் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளன.
இந்தியாவில் இருந்து 4 கோடி முட்டைகள் இறக்குமதி
சந்தையில் முட்டையின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் இருந்து சுமார் 4 கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.பண்டிகை காலத்தை இலக்கு வைத்து சந்தையில் முட்டை விலையை அதிகரிக்கும் சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளில் உணவு வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி
அரச பாடசாலைகளில் முதலாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 100 கல்வி வலயங்களைச் சேர்ந்த 7902 பாடசாலைகளை உள்ளடக்கி இந்த திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளரிடம் இன்று (மார்ச் 05) கையளிக்கப்பட்டது.
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான தொழிற்பயிற்சித் திட்டம் இன்று ஆரம்பம்
இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான தொழிற்பயிற்சித் திட்டம் இன்று (05) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 300 நிலையங்களைப் பயன்படுத்தி இந்தப் பயிற்சித் திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.
ஆயுதம் தாங்கிய படையினர் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள கட்டளை
பொது பாதுகாப்புக்காக நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை அழைப்பதற்கான கட்டளையை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார். 40வது அதிகாரமான பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 வது ஷரத்திற்கு அமைய வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்; 510 மில்லியன் டொலர் கடனை அரசாங்கம் பொறுப்பேற்க அனுமதி
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் செலுத்த வேண்டிய 510 மில்லியன் டொலர் கடனை அரசாங்கம் பொறுப்பேற்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
கடுவலையில் வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்த நபர்
நவகமுவ பொலிஸ் பிரிவில் கடுவலை,கொரதொட்ட பிரதேசத்தில் கட்டிட நிர்மாணப்பொருள் விற்பனை நிலையம் ஒன்றுக்கு அருகில் இன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்துள்ளது.ஸ்க்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த நபர், வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இரயில் சேவை முடங்கும் அபாயம்
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது. இந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் மேலும் பல தொழிற்சங்கள் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தெளிவான புத்தி சிந்தனையுள்ளவர் இலங்கையை இந்தியாவின் பகுதி எனக்கூறமாட்டார்
இலங்கையை இந்தியாவின் ஒரு பகுதி என தெளிவான புத்தி சிந்தனை இருக்கும் நபர் கூற மாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.ஹரின் பெர்னாண்டோ போன்ற ஆழமான அறிவில்லாத நபர்களுடன் விவாதம் நடத்தும் தேவையில்லை.இலங்கையை இந்தியா விழுங்குவதற்கு அரசாங்கம் இடமளித்து வருகிறது.இது ஹரின் பெர்னாண்டோ,ஜனாதிபதிக்கு நெருக்கமானவர் என்பதால், அந்த விடயத்தை அறிந்திருக்கின்றார் எனவும் வீரவங்ச கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கான விலைமனுவினை சமர்ப்பிக்க காலக்கெடு நீடிப்பு
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கான விலைமனுக்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 45 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
துமிந்த ஜயதிலக்க நாளை பணிக்கு சமூகமளிக்காவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்
போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலக நபர்களிடமிருந்து தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸிலிருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க நாளை (06) அவர் பணிக்கு சமூகமளிக்காவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (05) பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.
குடிபோதையில் அலரிமாளிகைக்குள் அத்துமீறிய இருவர் கைது ; கூகுள் மேப் செய்த களேபரம்
குடிபோதையில் அலரிமாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் நேற்றிரவு பிரதமரின் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, கொள்ளுப்பிட்டி பொலிஸார் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் கூகுள் வரைபடத்தை பயன்படுத்தி தங்குமிடம் திரும்ப முற்பட்ட போது ஏற்பட்ட தவறால் அலரிமாளிகையின் சுவரில் ஏறிக் குதித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் 14ம்திகதி வரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
பிரபல நடிகையை மிரட்டி கப்பம் கோரிய முன்னாள் காதலன்
இலங்கையின் பிரபல நடிகை ஒருவரின் நிர்வாணப்படத்தை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய போவதாக கூறி மிரட்டி ,நடிகையிடம் கப்பம் கோரிய,அவரது முன்னாள் காதலன் சம்பந்தமாக குற்றவியல் விசாரணை திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. தற்போது வெளிநாட்டில் இருக்கும் சந்தேக நபர் நடிகையுடன் நான்கு ஆண்டுகளாக காதல் தொடர்பில் இருந்து வந்துள்ளதுடன் அது பின்னர் முறிவடைந்துள்ளது.
தொல்பொருள் பாரம்பரியங்களை பாதுகாக்கும் நோக்கில் 'பிக்கு கதிகாவத்' சட்டத்தைத் தயாரிக்கத் திட்டம்
நாட்டின் தொல்பொருள்கள் மற்றும் தொல்பொருள் பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கு புதிய சட்டமூலமொன்றை உருவாக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்கால சந்ததியினருக்காக தொல்லியல்சார் பாரம்பரியங்களை பாதுகாக்கும் நோக்கில், தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து புதிய சட்டமூலமொன்றை உருவாக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 'பிக்கு கதிகாவத்' சட்டத்தைத் தயாரிக்கவும் எதிர்பார்த்துள்ளதோடு, அதற்கான முன்மொழிவுகளை மகா நாயக்க தேரர்களிடம் கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையும் வெப்பம் - எச்சரிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இந்த நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் ஏலம் இன்று
புதிய முதலீட்டாளரை தேர்ந்தேடுப்பதற்காக இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் ஏலம் இன்று நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஏலம் நேரடியாக நடைபெறும்.
எஸ்.சி.முத்துகுமாரன நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்
நாடாளுமன்ற உறுப்பினராக எஸ்.சி.முத்துகுமாரன சற்று முன்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். உத்திக பிரேமரத்னவின் இராஜினாமாவால் ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு எஸ்.சி.முத்துகுமாரன நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானிய பிரஜை பாலியல் துஷ்பிரயோகம் - ஒருவர் கைது
பிரித்தானிய பிரஜை ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 46 வயதுடைய நபரொருவர் குருநாகலை - பொல்பித்திகம பொலிஸாரால் நேற்று (04) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலைகளை குறைப்பு
நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில், சோற்றுப்பொதி ஒன்று 25 ரூபாயினாலும் கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாயினாலும் குறைக்கப்படவுள்ளன.
இலங்கையை வந்தடைந்த பசில்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இன்று (05) காலை இலங்கையை வந்தடைந்துள்ளார். இந்த நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக பசில் ராஜபக்ச களமிறங்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
பெருந்தோட்ட பகுதியில் வாழும் மாணவர்கள் குருட்டுத்தன்மையால் பாதிப்பு
பெருந்தோட்ட பகுதியில் வாழும் 80 வீதமான மாணவர்கள் குருட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார அத்தியட்சகர் வி.ஜே.கே.குமாரி தெரிவித்துள்ளார். போசாக்கின்மை மிகவும் கடமையாக பாதிப்படைந்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இடைநிறுத்தப்பட்ட பரீட்சையை நாளை நடத்த தீர்மானம்
வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானமையினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 10ஆம் மற்றும் 11ஆம் தரங்களுக்கான பரீட்சைகள் நாளையும், நாளை மறுதினமும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழப்பு
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவு செய்யப்பட வீதி விபத்துகளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கோப்பி பயிர்ச் செய்கைக்கு மீண்டும் முன்னுரிமை
இலங்கையானது மீண்டும் கோப்பி பயிர்ச் செய்கைக்கு முன்னுரிமை வழங்குவதற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கோப்பி பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு ஏற்ற நிலப்பரப்பு மற்றும் தட்பவெப்ப நிலைகளை இலங்கை கொண்டுள்ளமையே இதற்கு பிரதான காரணம் எனவும் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் வறட்சி - இன்றைய வானிலை
களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாகவும் நாட்டின் ஏனைய பகுதிகளில் வறட்சி நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றில் கையளிப்பு
சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (05) நாடாளுமன்றத்தில் கையளிக்கப்படும் என எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நிகழ்நிலை காப்பு சட்டத்திற்கான மறுசீரமைப்புகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை
நிகழ்நிலை காப்புச் சட்டத்தினால் கருத்து வெளியிடுவதனை குற்றச் செயலாக கருத முடியும் என தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் இங்கிலாந்து துணை நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரீட்டா பிரெஞ்ச் இலங்கையில் இதனை நடைமுறைப்படுத்தும் போது உரிய மறுசீரமைப்புகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கைத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊவா மாகாண ஆளுநரின் மகன் சரணடையவுள்ளதாக தகவல்
கொழும்பு -ஹெவ்லொக் டவுன் வீட்டுத் தொகுதியில் இளம் பெண்ணொருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் மகன் ஜனாதிபதி சட்டத்தரணியொவர் ஊடாக இன்று (5) பொலிஸ் நிலையத்தில் சரணடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்கொரியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மோசடி
தென்கொரிய விவசாயத்தொழிற்துறையில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி நாட்டின் பல பகுதிகளில் இடம்பெறும் மோசடிகள் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சனத் நிஷாந்தவின் பணியாளர் மீது தாக்குதல்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பணியாளர் ஒருவர் மீது அடையாளந்தெரியாதவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புத்தளம் நாகவில்லுவில் உள்ள கோழிப்பண்ணைகளில் கழிவுகள்அகற்றும் பணியை ஏலத்தினூடாக பெற்றதையடுத்து அதிலிருந்து வெளியேறுமாறும் சந்தேகநபர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.