எரிபொருள் விலை திருத்தம் செய்யும் சாத்தியம்: அத்தியாவசிய சேவைகளாக்கப்பட்ட மின்சாரம்
எரிபொருள் விலை திருத்தம் இன்று (04) இரவு இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாதாந்திர எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைவாக ஒவ்வொரு மாத இறுதியிலும் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.
எனினும் கடந்த பெப்ரவரி மாத இறுதியில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் எரிபொருள் விலை திருத்தம் இன்று மேற்கொள்ளப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.
இறுதியாக கடந்த ஜனவரி 31 ஆம் திகதி ஒக்டேன் 92, 95 ரக பெற்றோல்கள், சூப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.
அத்தியாவசிய சேவைகளாக்கப்பட்ட மின்சாரம் - எரிபொருள் விநியோகம்
இந்த பின்னணியில், 2024 மார்ச் 03 முதல் மின்சார விநியோகம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் விநியோகம் அல்லது விநியோகம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்யும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.
அதன்படி, குறிப்பிட்டுள்ள சேவைகளை வழங்குவதில் எந்தவொரு அரச கூட்டுத்தாபனம் அல்லது அரச திணைக்களம் அல்லது உள்ளூராட்சி நிறுவனம் அல்லது கூட்டுறவு சங்கம் அல்லது அவற்றின் கிளையொன்றினால் வழங்கப்படும் சேவைகள் வழமையான பொதுமக்கள் வாழ்வைக் கொண்டு நடத்துவதற்கு இன்றியமையாதது.
மற்றும் சொல்லப்பட்ட சேவைக்கு இடையூறாகக் கூடுமென்பதை அல்லது தடையாகக் கூடுமென்பதை கருத்திற் கொண்டு எந்தவொரு அரச கூட்டுத்தாபனம் அல்லது அரச திணைக்களம் அல்லது உள்ளூராட்சி நிறுவனம் அல்லது கூட்டுறவுச் சங்கம் அல்லது அவற்றின் கிளையொன்றின் மூலம் வழங்கப்படும் குறித்த சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகஸ்தர்கள் குற்றச்சாட்டு
இதற்கிடையில், எரிபொருள் விநியோகஸ்தர்கள் பெறும் மாதாந்திர தள்ளுபடி தொகையில் 35% பயன்பாட்டு கட்டணத்தை வசூலிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் விநியோக நடவடிக்கைகளுக்கான அன்றாட செலவுகளை கூட மேற்கொள்ள முடியாது என சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
எண்ணெய் குறைப்புகளை நீடிக்க OPEC+ உடன்பாடு
எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (OPEC) உறுப்பினர்கள் மற்றும் ரஷ்யா தலைமையிலான நட்பு நாடுகள், தன்னார்வ எண்ணெய் உற்பத்தி குறைப்புகளை முதல் காலாண்டிலிருந்து 2024 இன் இரண்டாவது காலாண்டில் நீடிக்க ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த குறைப்புகள் ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு தோராயமாக 2.2 மில்லியன் பீப்பாய்களாக காணப்பட்டது.
சவுதி அரேபியா தனது சொந்த எண்ணெய் உற்பத்தி குறைப்பை நீட்டிப்பதன் மூலம் முன்னோடியாக உள்ளது.
OPEC+ 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து சந்தையை நிலைப்படுத்துவதற்காக தொடர்ச்சியான உற்பத்திக் குறைப்புகளைச் செயல்படுத்தி வருகிறது.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை
மத்திய கிழக்கில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தத்தின் சமிக்ஞைகள் வெளிப்பட்டுள்ள நிலையில் எண்ணெய் விலை இந்த வாரம் வீழ்ச்சி அடையும் என்று நம்பப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 83.62 அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.
அதேநேரத்தில், யு.எஸ். மேற்கு டெக்சாஸ் இடைநிலை மசகு எண்ணெய் (WTI) 79.92 டொலர்களாக காணப்படுகிறது.