வாழ்க்கை செலவு அதிகரிப்பால் கொழும்புவாசிகள் பாதிப்பு: 40 சொற்களில் நாளாந்த செய்திகள்...
வாழ்க்கை செலவு அதிகரிப்பால் கொழும்புவாசிகள் பாதிப்பு
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக பாரிய சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வருவதாக கொழும்பு வாசிகள் குறிப்பிட்டுள்ளனர். மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்களை செலுத்துவதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் இருவர் உயிரிழப்பு
கட்டான - கிம்புலாபிட்டி பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில், அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில், படுகாயமடைந்த இரண்டு பேர் உயிரிழந்தனர். தீ விபத்தின்போது காயமடைந்த மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளனர்.
சுமந்திரனின் தாயாரின் பூதவுடலுக்கு மஹிந்த அஞ்சலி
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் தாயாரின் பூதவுடலை பார்வையிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதற்கு அஞ்சலி செலுத்தினார்.
சிவ்சங்கர் மேனன்- சந்திரிக்கா சந்திப்பு
இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க, நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இலங்கை மத்திய வங்கிக்கு கோப் குழு அழைப்பு
அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) அண்மைய சம்பள உயர்வு தொடர்பாக இலங்கை மத்திய வங்கியின் (CBSL) நிர்வாக சபையை அடுத்த வாரம் பாராளுமன்றத்திற்கு அழைத்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு
உத்திக பிரேமரத்ன 2024 பெப்ரவரி 26 ஆம் திகதி முதல் எம்.பி. பதவியை இராஜினாமா செய்துள்ளதால் ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
ரூபாவின் பெறுமதியில் சிறு உயர்வு
இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (28) சிறிதளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 305.56 ரூபாவகவும், 315.29 ரூபாவாகவும் காணப்படுகிறது.
சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் இஸ்ரேல், உக்ரைன் சுற்றுலாப்பயணிகள்
இலங்கையில் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் இலங்கை சுற்றுலாத்துறையில் கடும் பாதிப்புகள் ஏற்படக் கூடும் என்று ஆங்கிலப் பத்திரிகையொன்று சுட்டிக்காட்டியுள்ளது. தென்னிலங்கையில் சுற்றுலாத்துறை சார்ந்த வர்த்தகத்தில் ஈடுப்பட 99 வருட குத்தகைக்கு நிலங்களை கொள்வனவு செய்வதாக தெரியவருகிறது.
செங்கடலில் இலங்கை கடற்படை கப்பல்
செங்கடலிற்கு இலங்கை தனது கடற்படை கப்பலொன்றை அனுப்பியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். பாத்பைன்டர் அமைப்பின் இந்துசமுத்திர பாதுகாப்பு குறித்த மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அளுத்கம, பேருவளை வன்முறைகள் - மனுக்கள் மீதான வாதங்கள் ஆரம்பம்
அளுத்கம, பேருவளை உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் பதிவான இனவாத வன்முறை சம்பவங்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஐந்து அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான வாதங்கள் கடந்த திங்கட் கிழமை (26) ஆரம்பமானது. இந்த வன்முறையின் போது இருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை; சுதந்திரக் கட்சி ஆதரவு
நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.
கண்டியில் போக்குவரத்து நெரிசல்
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் எதிர்பார்ப்புடன் பெருமளவான மக்கள் வருகைதந்துள்ளதால், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கண்டி கிளை அலுவலகத்திற்கு முன்பாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இளநீர் விலை அதிகரிப்பு
நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக இளநீரின் தேவை அதிகரித்துள்ள நிலையில், கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதியில் இளநீர் ஒன்றின் விலை 200 ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக 120 முதல் 140 ரூபாவாக இருந்த நிலையில், இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
சாந்தனின் மரணத்திற்கு தமிழ் தலைமைகளே பொறுப்பேற்க வேண்டும்
சாந்தனின் மரணத்திற்கு இந்திய, இலங்கை அரசுகளும் தமிழ் தலைமைகளுமே பொறுப்பேற்க வேண்டும் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் தெரிவித்துள்ளார். கைது செய்யப்படும் இந்திய மீனவர்களை நல்லிணக்க அடிப்படையில் ஒரே இரவில் பேச்சுவார்தை மூலம் விடுதலை செய்ய முடியும் என்றால் ஏன் சாந்தனை உடன் விடுதலை செய்ய முடியாமல் போனது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய மின் இணைப்பு தொடர்பில் கலந்துரையாடல்
இந்திய மின்சக்தி அமைச்சின் செயலர் பங்கஜ் அகர்வால் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் தலைமையிலான குழு நேற்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு விஜயம் செய்து, இந்தியாவுடன் திட்டமிட்ட மின் இணைப்பு தொடர்பான கலந்துரையாடலை நடத்தியுள்ளது.
சம்பள அதிகரிப்பை கோரி பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டம்
சம்பள அதிகரிப்பைக் கோரி நாடு பூராகவும் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்விசாரா ஊழியர்கள் இரண்டு நாள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
ஊழியர்கள் மீது இடிந்து விழுந்த சுவர் - ஒருவர் உயிரிழப்பு
மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைலெவல் வீதிக்கு அருகில் உள்ள கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரு ஊழியர்கள் மீது கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 45 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு விசேட அறிவித்தல்
நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை எதிர்வரும் நாட்களில் வெள்ளிக்கிழமை வரை மோசமாக இருக்கும். எனவே மாணவர்களை வெளி நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் முதலீடுகள் - கால அவகாசம் நீடிப்பு
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் முதலீடுகளை மேற்கொள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து முன்மொழிவுகளை கோருவதற்கான கால அவகாசத்தை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு அடுத்த மாதம் 6ஆம் திகதிவரை நீட்டித்துள்ளது.
சட்டவிரோத மின் வேலியில் சிக்கி குடும்பஸ்தர் பலி
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டமொன்றில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் இன்று (28) அதிகாலை உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பத்தனை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஜப்பானில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானில் நிர்மாணத் துறையில் தொழில்நுட்ப பயிற்சியாளர்களாக இலங்கை ஆண்களுக்கு வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை மார்ச் 09, அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பாலியல் கல்வி தொடர்பான திட்டத்தை எதிர்வரும் மார்ச் மாதம் தொடங்கும் கல்வி அமைச்சு
சிறுவர்களின் பருவ வளர்ச்சிக்கு முந்தைய நிலை முதல் வயது வந்தோர் சமூகம் வரை பாலியல் பற்றிய கல்வியை வழங்குவதற்காக தொகுக்கப்பட்ட புதிய கல்வி வெளியீடுகளை வெளியிட கல்வி அமைச்சு ஏற்பாடுகளை செய்துள்ளது. குறித்த வெளியீடுகள் மார்ச் 07, 2024 அன்று வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.
'யுக்திய' சுற்றிவளைப்பு - 647 சந்தேக நபர்கள் கைது
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட 'யுக்திய' சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 647 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தை பிரித்தெடுக்கும் நடவடிக்கையை நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது
லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் கார்ப்பரேஷன் பிஎல்சி நிறுவனத்தை பங்குபற்றல் நடவடிக்கையை மார்ச் 12 ஆம் திகதி வரை முன்னெடுப்பதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.
அஸ்வெசும இரண்டாம் கட்ட நடவடிக்கை - 30,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது
அஸ்வெசும இரண்டாம் கட்ட நடவடிக்கையின் முதல் 12 நாட்களில் 30,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு அதிகாரிகளுடன் தீர்க்கமான கலந்துரையாடல் இன்று
சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளனம் உறுப்பினர்களுக்கும் சுகாதார அமைச்சின் குழுவிற்கும் இடையில் இன்று (28) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
அரச குடும்பநல சுகாதார சேவையாளர்கள் சங்க தலைவர் சஜித்துடன் இணைவு
அரச குடும்பநல சுகாதார சேவையாளர்கள் சங்கத்தின் (GMSA) தலைவர் தேவிகா கொடித்துவக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்துள்ளார்.
போதைபொருளுடன் ஆசிரியர் கைது
ஹலவத்தை பகுதியில் 90 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசாங்க நிதி பற்றிய குழுவில் முன்னிலையாகுமாறு மத்திய வங்கியின் ஆளுநர் சபைக்கு அழைப்பு
அரசாங்க நிதி பற்றிய குழுவில் அடுத்த வாரம் முன்னிலையாகுமாறு மத்திய வங்கியின் ஆளுநர் சபைக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அந்த குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்கவிலிருந்து புறப்படவிருந்த 3 விமானங்கள் இரத்து
கட்டுநாயக்கவிலிருந்து இன்று அதிகாலை 12.25 மணியளவில் கட்டுநாயக்காவிலிருந்து மலேசியா- கோலாலம்பூருக்கும் இந்தியாவின் ஹைதராபாத்திற்கும் செல்லவிருந்த விமானங்களே ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் நேபாளத்தின் காத்மாண்டு நகருக்குச் செல்லவிருந்த விமானமும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் பராட்டே சட்ட திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்ப்பு
அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பராட்டே சட்டம் தொடர்பான திருத்தத்தை எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்க்கப்படுவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
மஹரகமயில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி - மேலும் ஒருவர் காயம்
மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைலெவல் வீதிக்கு அருகில் கட்டிட நிர்மாண பணியில் ஈடுபட்டிருந்த உழியர்கள் இருவர் மீது சுவர் இடிந்து வீழ்ந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இன்று
மின்கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இன்று (28) வெளியிடப்பட உள்ளன.புதிய கட்டண திருத்தத்தின் பிரகாரம் சுமார் 18 சதவீத மின்கட்டணங்கள் குறைக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராணுவ வீரர் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற மோதலில் உயிரிழப்பு
மஹாபாகே பகுதியில் இறைச்சிக் கடை உரிமையாளரின் கொலை மற்றும் பல குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த முன்னாள் இராணுவ வீரர் சூரியவெவ பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்துள்ளார்.
நாட்டில் இன்று கடும் வெப்பம்
நாட்டில் இன்றைய தினம் (28) கடும் வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் அதிகமாக உணரக்கூடிய வெப்பநிலை இன்று காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேக்கரி பொருட்களின் விற்பனையில் வீழ்ச்சி
பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை உயர்வு காரணமாக, விற்பனையில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எடை குறைந்த மாணவர்கள் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பதிவு
கடந்த வருடத்தில் பாடசாலை மாணவர்களின் உயரத்துடன் ஒப்பிடும்போது குறைந்த எடையுடன் கூடிய அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக குடும்ப சுகாதார பணியகம் வெளியிட்ட போஷாக்கு தரவுகளில் தெரியவந்துள்ளது.
வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தும் நீதியமைச்சு
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் முன்னெடுத்துள்ள “யுக்திய” நடவடிக்கை காரணமாக சிறைச்சாலைகள் நிரம்பி வழியும் நிலையில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், வழக்குகளில் தேவையற்ற தாமதங்களைத் தடுக்கவும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக நீதியமைச்சு அறிவித்துள்ளது.
சஜித்துக்கும் , அனுரவுக்கும் ஜனாதிபதியாக அனுபவம் போதாது
நாட்டின் ஜனாதிபதி பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திசாநாயக்கவுக்கு அனுபவம் போதாது என்று அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ விமர்சித்துள்ளார்.