பதவி விலகல் தொடர்பில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள டக்ளஸ்: கடற்தொழிலாளர்களுடன் இணைந்து போராடவும் தயார்

OruvanOruvan

Douglas Meeting

கடற்தொழில் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதற்கு தயராக இருப்பதாக டக்ளஸ் தேவானந்தா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்திய கடல் தொழிலாளர்களின் அத்துமீறிய சட்டவிரோத தொழிலால் வளங்கள் சுரண்டப்படுகின்றன எனவும், இலங்கை கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஆகவே ஒரு வினாடி கூட தடை செய்யப்பட்ட சட்டவிரோத தொழிலுக்கு இடம் கொடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

பதவி விலகல்

அதுமட்டுமன்றி, இந்திய அரசிடமிருந்து இலங்கை அரசிற்கு மீனவர்கள் தொடர்பான பிரச்சினை குறித்து தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுமானால் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்து விட்டு மீனவ மக்களுடன் இணைந்து கடலில் போராடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

இந்திய தூதுவருடன் சந்திப்பு

“நான் நீண்டகாலமாக எதை கூறி வந்தேனோ அதைத்தான் வரலாறும் இன்றைக்கு ஏற்றுக் கொண்டிருக்கின்றது.

அன்றைக்கு நான் சொன்னதை சக கட்சிகள், சக இயக்கங்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் இன்றைக்கு இந்த அழிவுகள், இழப்புக்கள், துன்பங்கள் வந்திருக்காது என இலங்கைக்கான இந்திய தூதுவருடனான கலந்துரையாடலில் கூறியிருந்தேன்.

அதைவிட மிக முக்கியமாக சமீபத்தில் ஜேவிபியின் தலைவர் புதுடெல்லிக்கு சென்று இருந்தார். ஆனால் அவர் அங்கு எமது கடற்தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு

அதைவிட வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கடந்தவாரம் இந்திய தூதுவர் சந்தித்திருந்தார். அங்கு கூட நமது கடற்தொழில் மக்களின் பிரச்சினைகள் குறித்து பிரதிநிதிகள் எவற்றையும் கலந்துரையாடவில்லை.

ஆனால் என்னுடைய பேச்சுவார்த்தையில் கூடியளவு நேரம் இலங்கை இந்திய கடற்தொழிலாளர்கள் குறித்த பேச்சும், இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்கள் குறித்துமே பேசப்பட்டது.

ஆனால் இந்திய தரப்பிலிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் ஏற்படுத்தப்படுமாக இருந்தால் நான் அமைச்சரவையில் இருந்து இராஜினாமாசெய்துவிட்டு, எமது கடற்தொழிலாளர்களுடன் இணைந்து கடலில் எதிர்ப்புப் போராட்டம் நடத்துவதற்கு தயாராக உள்ளேன் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.