அமெரிக்காவின் கைகளுக்குச் சென்ற மைத்திரி பற்றிய ரகசிய அறிக்கை: இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமெரிக்க விஜயம் குறித்து கடந்த வாரம் தென்னிலங்கை ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கின் வற்புறுத்தலின் பின்னரே அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மைத்திரியால் ஏற்பாடு செய்ய முடிந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இராஜாங்க திணைக்கள அதிகாரிகளை சந்திக்க வேண்டியதன் அவசியத்தை கேட்டறிந்த பின்னரே அந்த கலந்துரையாடலில் மைத்திரி கலந்துகொண்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும், மைத்திரியின் கோரிக்கையை அடுத்து, அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இரண்டாம் தர அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்ததாக தென்னிலங்கை ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி உதவிச் செயலாளர் அஃப்ரின் அக்தர் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மைத்திரிபால சிறிசேனவுடன் மற்றுமொரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும், அமெரிக்க அதிகாரிகள் காரணம் எதுவும் தெரிவிக்காமல் கடைசி நேரத்தில் அதனை ரத்து செய்திருந்தனர்.
மைத்திரிபாலவின் அரசியல் பிரபல்யம் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு கிடைத்த ரகசிய அறிக்கையின் அடிப்படையில் அமெரிக்க அதிகாரிகள் இறுதி நேரத்தில் சந்திப்பை இரத்துச் செய்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிகாரிகளுடனான சந்திப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அடிப்படையாகக் கொண்ட கூட்டணியில் போட்டியிடத் தயாராகி வருவதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
அத்துடன் சமகால அரசாங்கத்தின் தவறுகளையும் அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த மைத்திரி நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஜே.வி.பி மீது மைத்திரி கடுமையான விமர்சனத்தை அமெரிக்க அதிகாரிகளிடம் முன்வைத்திருந்ததாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.