சிறிதரனை தலைவராக்க கடுமையாக உழைத்த சாள்ஸ்: ரகசிய சந்திப்பில் ரணில் கூறியது என்ன?
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான போட்டியில் சிவஞானம் சிறிதரன் வெற்றி பெற மிகவும் பாடுபட்டவர் சார்ள்ஸ் நிர்மலநாதன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாடாளுமன்றத்துக்குச் சென்றார் ரணில் விக்கிரமசிங்க.
கூட்டம் முடிந்ததும் அவரது அறையை நோக்கி விரைந்தார். அப்போது ஜனாதிபதியின் அறைக்கு அருகில் ஜனாதிபதியை எதிர்பார்த்துக்கொண்டு நின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்.
சார்ள்ஸைக் கண்டதும் ஜனாதிபதி, "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வருங்காலத் தலைவர் வந்து நிற்கின்றார்" - என்றார்.
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரா?" என்று கேட்டார்கள் ஜனாதிபதியுடன் வந்தவர்கள்.
"ஆம்... இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் வெற்றிக்கு மிகவும் பாடுபட்டவர் இவர்தானே...." என்று பதிலளித்தார் ஜனாதிபதி.
அப்படியே சார்ள்ஸ் நிர்மலநாதனை அறைக்குள் அழைத்துச் சென்று உரையாயாடினார் ஜனாதிபதி.
வடக்கின் அபிவிருத்திக்குப் புலம்பெயர் தமிழர்களை உதவச் சொல்லுங்கள் என்று சார்ள்ஸிடம் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.