ஜனாதிபதி தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளர் ரணில்?: நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக களமிறக்குவதற்கு பொதுஜன பெரமுன மத்தியில் நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
மஹிந்தானந்த அளுத்கமகே, பிரசன்ன ரணதுங்க, மஹிந்த அமரவீர, காஞ்சன விஜேசேகர, செஹான் சேமசிங்க மற்றும் பந்துல குணவர்தன உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ரணிலுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ள சூழலில் அமைச்சர் டிரான் அலஸும் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக களமிறக்குவதற்கான தமது ஆதரவினை பொதுப் பாதுகாப்பு அமைச்சரான டிரான் அலஸ் வெளிப்படுத்தினார்.
அது குறித்து பேசிய அமைச்சர்,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக நிறுத்த நாம் அனைவரும் ஆதரவு வழங்குகிறோம்.
இந்த நாட்டை வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்து மீட்டெடுக்கவும், வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வரவும் ஜனாதிபதியால் முடிந்தது.
நிலைமையை புரிந்து கொண்டவர்கள் வேறொரு ஜனாதிபதியைப் பற்றி சிந்திக்கக் கூடாது என்பதே எமது கருத்தாகும் என்றார்.
எந்த அழுத்தம் வந்தாலும் ஆரம்பிக்கப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும் நிறுத்தப்படமாட்டாது
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குதல் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் இந்த செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நாங்கள் தயாராக இல்லை.
இந்த வேலைத்திட்டம் தொடர்பில் எம்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த செயற்பாட்டைச் சீர்குலைக்க பல்வேறு நபர்களும் குழுக்களும் முயற்சித்து வருகின்றனர்.
போதைப்பொருள் வலையமைப்பு மூலம் பணம் பெறுபவர்கள் அந்தக் குழுக்களுக்கு பணத்தை செலவிடுவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.