இந்தியா அழைத்ததால் அதிர்ச்சியடைந்துள்ள சிங்கள அரசியல் தலைவர்கள்: மேலும் அதிசயங்கள் நடக்கும் என்கிறார் அனுரகுமார

OruvanOruvan

Anura Kumara Dissanayaka - Member of the Parliament

இந்தியாவுக்குச் சென்று கலந்துரையாடியமையால் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் அச்சமடைந்திருப்பதாக ஜே.வி.பி. எனப்படும் எங்கள் மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று ஞாயிறுக்கிழமை இடம்பெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய அவர் தமது இந்திய பயணம் தொடர்பில் ஆதரவாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முரண்பாடு இருப்பதால் இருவரும் ஒன்றுசேர முடியாது. ஆனால், மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா, சஜித் போன்ற தலைவர்கள் ஒரே மேடைக்கு வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

இந்தியா அழைத்து பேசியதால் அச்சமடைந்துள்ள இந்த அரசியல் தலைவர்கள் ஜே.வி.பியை ஓரம் கட்டுவதற்காக ஒரேமேடைக்கு வருவார்கள் என்றும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பியின் வளர்ச்சியாலும் வல்லரசு நாடுகள் அழைப்பதாலும் அச்சமடைந்துள்ள சிங்கள தலைவர்களால் தமக்கு எதிராக மேலும் பல அதிசயங்கள் இலங்கைத் தீவு அரசியலில் நடக்கக்கூடும் என்றும் அவர் எதிர்வுகூறினார்.

இந்தியாவைக் கையாள தங்களால்தான் முடியுமென இந்த தலைவர்கள் இதுவரைக் காலமும் நம்பியிருந்தனர். ஆனால், இப்போது அது ஜே.வி.பியினாலும் முடியுமென்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்பதையும் அவர் விபரித்தார்.