சனத் நிஷாந்தவின் மரணம் திட்டமிட்ட கொலையா?: கொள்கலன் சாரதியிடம் 5 மணி நேரம் விசேட விசாரணை
![Oruvan](https://gumlet.assettype.com/oruvan/2024-01/573ac851-5ad6-4fa2-b2ea-6b7ded35095e/Screenshot_2024_01_25_131924.png?format=webp&w=800&q=70)
![Oruvan](/site-related-assets/no-image.webp)
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷந்தவின் மரணம் திட்டமிட்ட படுகொலையா என்ற கோணத்தில் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இரகசிய விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் மனிதப் படுகொலை மற்றும் பாதாள உலக குற்றங்கள் குறித்து விசாரிக்கும் சிறப்பு பிரிவு இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு அடிக்கடி ஆளாகிவந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த கடந்த ஜனவரி 25 ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் கட்டுநாயக்க கொழும்பு அதிவேக வீதியில் 11 ஆவது கிலோமீற்றர் அளவீட்டுக் கல்லை அண்மித்த பகுதியில் நடந்த வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இதன்போது அவரது மெய் பாதுகாவலரும் அவ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது சாரதி மட்டும் சிறு காயங்களுடன் தப்பித்தார்.இந்நிலையில், இந்த சம்பவம் வெறும் விபத்து அல்ல எனவும் அது திட்டமிட்ட கொலை எனவும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட சனத் நிசாந்தவின் சாரதி, வெலிசறை நீதிவானிடம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தையடுத்து ஏற்பட்ட சந்தேகங்களை அடுத்து, சாரதியின் கையடக்கத் தொலைபேசி சி.ஐ.டி.யினரால் கைப்பற்றப்பட்டு தற்போதும் அங்குள்ள டிஜிட்டல் பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
விபத்துக்கு முன்னர் சாரதி தனது வட்ஸ் அப் ' ஸ்டேடஸ்' ஊடாக வெளிப்படுத்திய விடயம் ஒன்றினை மையப்படுத்தி இவ்வாறு சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பித்தது.
இவ்வாறான நிலையில், சனத் நிசாந்தவின் மனைவியான சட்டத்தரணி சமரியும் தனது கணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக 5 முக்கிய விடயங்களை மையப்படுத்தி சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு அளித்திருந்தார்.
அவரது முறைப்பாடு அளிக்கபப்டும் போதும் சி.ஐ.டி. இரகசிய விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில் தற்போது அவ்விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி இன்று, சனத் நிசாந்த பயணித்த சொகுசு ஜீப் வண்டி மோதிய கெண்டனர் ( கொள்கலன்) வண்டியின் சாரதியை சி.ஐ.டி.யினர் விசாரணை செய்தனர். அதன்படி அவரை சுமார் 5 மணி நேரம் விசாரித்த சி.ஐ.டி. குழு, அவரிடம் வாக்கு மூலம் ஒன்றினையும் பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே கந்தானை பொலிசார் விபத்தின் பின்னர் பதிவு செய்த வாக்கு மூலங்களும் சி.ஐ.டி.யினரினால் ஆராயப்பட்டுள்ளன.
ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையின் போது சனத் நிசாந்தவின் சாரதி அளித்த வாக்கு மூலத்தில், ஒன்றரை மணி நேரத்தில் கொழும்புக்கு செல்ல வேண்டும் என சனத் நிசாந்த கூறியதால் வேகமாக வாகனம் செலுத்தியதாகவும், இதன்போது வேகமாக சென்ற கார் ஒன்றுக்கு இடமளிக்க முயற்சித்த போது, தனது கட்டுப்பாட்டை மீறி ஜீப் வண்டி முன்னால் பயணித்த கொள்கலனின் ஒரு பக்க மூலையில் மோதியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் பொலிஸ் விசாரணைகளின் பிரகாரம் விபத்தின் போது, சனத் நிசாந்த பயணித்த ஜீப் வண்டி சுமார் மணிக்கு 150 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்துள்ளமை தெரியவந்தது.
அவரது ஜீப்பை முந்திச் சென்ற வாகனம் அதனைவிட வேகமாக சென்றிருக்க வேண்டும் என கூறும் பொலிசார், அதிவேக பாதை சி.சி.ரி.வி. கமராக்களை சோதனை செய்து வரும் நிலையில், சாரதியின் குறித்த வாக்கு மூலம் தொடர்பில் பாரிய சந்தேகம் எழுந்துள்ளது.
இதனைவிட விபத்தின் பின்னர், விபத்து நடந்த இடத்தில் சாரதியின் நடவடிக்கைகள் மற்றும் அசைவுகள் தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளது.
இவ்வாறான நிலையிலேயே இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ள சி.ஐ.டி.யின் மனிதப் படுகொலைகள் மற்றும் பாதாள உலக குற்றங்கள் தொடர்பில் விசாரிக்கும் பிரிவு பல்வேறு தடயங்களை மையபப்டுத்தி விசாரணைகளை முன்னெடுக்கின்றது.
BY: MFM.Fazeer