ஹரிகரனின் இசைக்கச்சேரி முடிந்தும், முடியாத விமர்சனங்கள்...: நிகழ்ச்சி இந்தியாவின் பிரபல தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டதா?
ஒரு பெரும் வர்த்தகர் தனது சொந்த பணத்தை முதலீடாக கொண்டு ஒரு வர்த்தகத்தை தொடங்குகின்றார். அவ்வாறு ஆரம்பிக்கும் ஒரு தொழிலை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய தேவை அவருக்கு இருக்கின்றது. மேலும் அதை அவர் பிரபல்யப்படுத்தவும் வேண்டும்.
அதற்காக அவர் தேர்ந்தெடுத்த ஒரு யுக்திதான் தென்னிந்திய பிரபலங்களை இலங்கைக்கு அழைத்துவரும் திட்டம்.
ஆனால், இவருடைய வர்த்தக செயற்பாட்டிற்கு யாழ்ப்பாணத்தில் பல எதிர்ப்புகள் உண்டு.
இதன் காரணமாகவே, தன்னுடைய விளம்பரப்படுத்தலுக்கான ஒரு திட்டம் என சொல்லாமல், யுத்தத்தால் மக்கள் துவண்டு போய் இருக்கின்றார்கள் அவர்களை மகிழ்விக்கவே நான் பில்லியன் கணக்கில் பணத்தை செலவு செய்து இவ்வாறான ஒரு கச்சேரியை நடத்துகிறேன் என்று அவர் கூறியிருந்தார்.
இவ்வாறு கூறியமைக்கு யாழ்ப்பாணத்தில் பல எதிர்ப்புகளும் இருந்தன. இசைக் கச்சேரியை நடத்தியிருக்கலாம், ஆனால் நடிகைகளை அழைத்து வந்திருக்க வேண்டாம் என்ற கருத்தும் உண்டு.
எது எவ்வாறாயினும், இது அவரின் தனிப்பட்ட வியாபாரத்துக்கான விளம்பரம் என்பதையும் நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
ஸ்லீட் கல்வி நிறுவனம் (SLIIT)
ஸ்லீட் நிறுவனத்துக்கு நாடு பூராகவும் பல கிளைகள் உள்ளன. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் தான் ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன்.
இவர் கஷ்டமான ஒரு பின்னணியில் இருந்து பின்னர் கனடாவில் உயர் கல்வியை கற்று இன்று பெரும் செல்வந்தராக உருவெடுத்துள்ளார். மேலும், புலம்பெயர் தமிழர் என்ற வகையில் இலங்கையில் பல துறைகளில் முதலீடுகளிலும் அவர் ஈடுபட்டு வருகின்றார்.
இதில் யாழ்ப்பாணத்து கிளை தான் நோர்த்தன் யுனி. இதனை பிரபலப்படுத்தவே இந்த தென்னிந்திய பிரபலங்களை அழைத்து வந்துள்ளார்.
ரம்பா சினிமா நட்சத்திரம் என்ற அடிப்படையில் அவரின் உதவியுடன் அவர் தென்னிந்திய பிரபலங்களை அழைத்து வந்துள்ளார். 'ஆரம்பத்தில் அவர்களுக்கு இங்கு வருவதற்கான நாட்டம் இல்லை' என்று அவரே தன் வாயால் ஒரு கருத்தையும் யாழ்ப்பாண விமான நிலையத்துக்கு வருகை தந்தபோது முன்வைத்திருந்தார்.
இது இவரின் பாரிய ஒரு முதலீட்டு திட்டம் மற்றும் முற்றிலும் விளம்பரம் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இசை நிகழ்ச்சில் எவ்வித இலாபமும் இல்லை என்பதையும் அவர் தெரிவித்திருந்தார்.
(கல்வி, மருத்துவம் வியாபாரமாகிவிட்ட இந்த காலத்தில் சேவை அடிப்படையில் எதையும் எதிர்பார்க்கமுடியாது. )
இவரின் இந்த வியாபார செயற்பாடுகள் சேவை அடிப்படையிலான திட்டமா? அல்லது முதலீட்டு அடிப்படையிலான திட்டமா? என அவர்தான் கூறவேண்டும்.
நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு முறையாக இல்லை
ஆரம்பத்தில் ஹரிகரன் இலங்கைக்கு வருகிறார் இசைக்கச்சேரிக்கான டிக்கெட்டுக்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், டிக்கெட்டுக்களுக்கு பணம் அறவிடப்படும் என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் இடப்பட்டன. இதனால் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டாளர்கள் சீராக செயற்படவில்லை எனவும் தற்போது பெரிய விமர்சனமாகியுள்ளது.
நிகழ்ச்சியில் மோதல் ஏற்பட ஏதுவான காரணங்கள்
இசைக்கச்சேரியை கண்டுகளிக்க ரிக்கெட் வாங்கியவர்கள் மற்றும் ஏனையவர்களிடையே ஏற்பட்ட மோதல்தான் பிரதான காரணம் என கூறப்பட்டாலும் இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமம் இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, சிறந்த காட்சியமைப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக பார்வையாளர்களை மறைக்கும் விதமான வீடியோ அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை பெற்றுக்கொள்ள அது தடையாக இருந்துள்ளது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் இதைச் சரியாக வழிநடத்தியிருக்கவில்லை.
யாழ்ப்பாணத்தின் உண்மையான பிம்பம் இதுதான் என மாறிப்போன அவலம்
கல்வி, ஒழுக்கத்திற்கு பெயர் போன ஒரு சமூகம்... இன்று இப்படி ஒழுக்கமற்ற முறையில் நடந்துக்கொண்டதை மனம் ஏற்க மறுக்கின்றது. ஒட்டு மொத்தத்தில் இலங்கை வாழ் தமிழர்கள் இப்படி தான்..." என்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்திய ஒரு சில தமிழர்களுக்கு இதை சொன்னாலும் புரியாது.
நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் சிலர் மது போதையில் இருந்துள்ளார்கள்.. அவர்களே குழப்பத்தை ஏற்படுத்தினார்கள் என ஏற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கசப்பான உண்மை . இதுவரைக் குழப்பம் விளைவித்தவர்கள் யார் என்று யாருக்கும் தெரியாத மர்மமாகவே உள்ளது.
சமூக வலைத்தள விமர்சனங்கள்
இந்த இசைக்கச்சேரி பற்றி பலர் சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள், மீம்ஸ்கள், போஸ்டுகளை பதிவு செய்தாலும் அது அனைத்துமே சரியான புரிதல் இன்மை என்பதைத் தான் எடுத்துக்காட்டுகின்றது.