கொலை வழக்கில் 35 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பெண் கைது: பொலிஸாருக்கு பயந்து தனித் தனியாக வாழ்ந்த தம்பதியினர்

OruvanOruvan

Arrested Photo Credit - Getty Images

கொலையொன்றைச் செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35 வருடங்களாக தலைமறைவாக இருந்த பெண்ணொருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

1989 ஆம் ஆண்டு அத்துருகிரிய வெள்ளவ பிரதேசத்தில் இலங்கை மின்சார சபை தர பரிசோதகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

குறித்த நபரின் மனைவி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி வெள்ளவ, அதுருகிரிய பிரதேசத்தில் வசிக்கும் தம்பதியரை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது கைது செய்யப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க பெண் மின்சார சபையில் ஆங்கில தட்டச்சராக பணியாற்றி வந்ததும், கொலை செய்யப்பட்ட நபருடன் தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்தது.

1989 ஆம் ஆண்டு ஒரு குறிப்பிட்ட நாளில், இது தொடர்பான உறவு தனது கணவருக்குத் தெரியவந்ததையடுத்து, அந்த பெண் தனது கணவரின் அறிவுறுத்தலின் பேரில் குறித்த நபரை அத்துருகிரிய, வெள்ளவயில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.

குறித்த பெண் தனது கணவருடன் இணைந்து குறித்த நபரை கொன்று, பின்னர் பீப்பாய்க்குள் போட்டு கிணற்றில் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, கணவன்-மனைவி இருவரும் 6 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட தம்பதியினர் பின்னர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, அவர்கள் இல்லாமலேயே விசாரணை நடத்தப்பட்டதையடுத்து, 2019ஆம் ஆண்டு தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், கொலையைச் செய்த தம்பதியை எந்த பொலிஸாராளும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில், கொலையைச் செய்த பெண், பண்டாரகம பமுனுகம பிரதேசத்தில் வாடகை வீட்டில் பதுங்கியிருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவருக்குத் தகவல் கிடைத்திருந்தது.

அதன்படி நேற்று (09) விசாரணை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது, ​​ஒரு குழந்தைக்கு தாயான குறித்த பெண்ணுக்கு 64 வயது.

கடந்த 35 வருடங்களாக இந்த தம்பதியினர் தீவு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள உறவினர்களிடம் இருந்து தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரிடம் சிக்கிவிடுவோம் என்ற பயத்தில் இருவரும் தனித்தனியாக வாழ்ந்ததாக குறித்த பெண் தெரிவித்துள்ளார். எனினும் அவரது கணவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

சந்தேகநபர் இன்று (10) ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.