பசிலின் வருகைக்காக காத்திருக்கும் பொதுஜன பெரமுன: ரணில் எடுத்துள்ள முயற்சி வெற்றியளிக்குமா?

OruvanOruvan

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச அடுத்தவாரம் தாயகம் திருப்ப உள்ளார்.

பசிலின் வருகையின் பின்னரே ஜனாதிபதி தேர்தல் மற்றும் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் பொதுஜன பெரமுன முடிவெடுக்க உள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் தெரிய வருகிறது.

ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக களமிறங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

ஆனால், பசில் ராஜபக்ச நாட்டில் இல்லாமையால் வேட்பாளர் தொடர்பில் இறுதி முடிவுகள் எதனையும் எடுக்க முடியாது அக்கட்சி இக்கட்டான நிலையில் உள்ளது.

இந்நிலையில் பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன,

”கடந்த ஜனாதிபதி தேர்தலின்போதும் இறுதி தருவாயிலேயே ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட்டோம். வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான பலம் எமது கட்சியிடம் இன்னும் உள்ளது.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பலர் போட்டியிடவுள்ளனர். எனவே, வெற்றி வேட்பாளர் ஒருவரை நிச்சயம் களமிறக்க வேண்டும். உரிய வகையில் வியூகம் அமைத்து, கட்சியாக கூடிய முடிவெடுக்கப்படும்.

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஐந்தாறு மாதங்கள் உள்ளன. எனினும், அதுவரை காத்திருக்கமாட்டோம், பசில் ராஜபக்ச ஓரிரு நாட்களில் நாடு திரும்புவார், அவர் வந்த பின்னர் முடிவெடுக்கப்படும்.

தற்போதைய சூழ்நிலையில் எமது கட்சியே முன்னிலையில் இருக்கின்றது. கூட்டணியாகவே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவோம்.” – என்றார்.