சபாநாயகர் சட்டத்தை மீறிவிட்டார்: இலங்கையில் அவசரமாக ஒன்றுக்கூடும் எதிர்க்கட்சிகள்

OruvanOruvan

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டியுள்ளன.

கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்,

”அரசியல் யாப்பிற்கு முரணாக நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டுள்ளார். அதாவது நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் திருத்தங்களை செய்யவேண்டும் என உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிவித்திருந்தது.

ஆனால் உயர் நீதிமன்ற பரிந்துரைகளை ஏற்காமல் திருத்தங்களையும் செய்யாமல் நிகழ்நிலை காப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இது அரசியல் யாப்பிற்கு முரணானது என சுட்டிக்காட்டியுள்ள எதிர்கட்சிகள் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர தீர்மானித்துள்ளன.

தற்போதைய அரசாங்கம் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறியுள்ளதுடன், சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்கிறது. நிகழ்நிலை காப்புச் சட்டம் இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்டு நிறைவேற்றப்பட்ட சட்டம் அல்ல.

தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் இந்தச் சட்டத்திற்கான எதிர்மறையான விளைவுகளை நாடு அனுபவிக்க நேரிடும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அமைதிப் போராட்டத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட நீர்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைத் தாக்குதலையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

வரலாற்றில் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு நீர்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.” எனவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கூறியுள்ளார்.

விரைவில் நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து ஒன்றுக்கூடி கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.