'தமிழர் தாயகத்தில் சுதந்திரம் இல்லை' என்பதை கிளிநொச்சி சம்பவம் காட்டியுள்ளது: பாராளுமன்ற உறுப்பினர் மீதும் தாக்குதல்

OruvanOruvan

ஆயுதமின்றி தமது உரிமைகளுக்காக போராடிய பல்கலைக்கழக மாணவர்கள் மீதான அடக்குமுறையை இலங்கையின் சுதந்திர தின நாளிலும் தோலுரித்து காட்டுகிறது என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற சுதந்திர தினத்திற்கெதிரான கரிநாள் போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழர்கள் இவ்வாறான போராட்டங்களின் மூலம் தான் இழந்தவற்றை பெறமுடியும் என பலருக்கும் தெரியும். இங்கு ஆயிரம் இரண்டாயிரம் பேர் இருந்திருந்தால் பரவாயில்லை.

என்னை பொறுத்தவரை வீசப்பட்ட புகைக்குண்டு, பாராளுமன்ற உறுப்பினர் உட்பட பெண்கள் மற்றும் மாணவர்களை தாக்கியது. இதுவெல்லாம் ஒரு வேண்டப்படாத செயல்.

அவர்கள் இவ்வாறு செய்ததன் மூலம் உண்மையிலே பெரும்பான்மைக்குரிய சுதந்திர தினத்திலே அவர்கள் தங்களுக்கு தாங்களே கறையை ஏற்படுத்தி விட்டார்கள்.

தமிழர் தாயகத்தில் எமக்கு சுதந்திரம் இல்லை என்பதை இன்றைய நாளும் ஒரு சான்றாகும் .இன்று தமது செயல்களால் இந்த போராட்டத்தினை உலகறிய செய்துவிட்டார்கள்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்களை விடுவிக்குமாறு ஏ9 வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் இன்று பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்தப் போராடத்தை கட்டுப்படுத்த பொலிஸார் தடைகளை அமைத்திருந்ததுடன், அதனை மீறி செல்ல முற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து மாணவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் நீர்தாரை மற்றும் கண்ணீர் புகைப் பிரயோகங்களை மேற்கொண்டிருந்தனர்.

இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் பொலிஸாரினால் போராட்டம் தடுத்து நிறுத்தம்

கிளிநொச்சியில் சுதந்திர தின எதிர்ப்பு பேரணி பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன் எட்டு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் பேரணியை தடுப்பதற்காக நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்ககோரி ஏ9 வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டதுடன் பேச்சுவார்த்தையின் பின்னர் மாணவர்களை விடுவிக்க இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மாணவர்களை விடுவிக்கும் வரை போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏழு பேர் கைது ; ஏ9 வீதி முடக்கம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளமையால் கொழும்பு - யாழ்ப்பாணம் ஏ9 வீதி முடக்கப்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் உறுதிப்படுத்தினார்.

கிளிநொச்சியில் நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம்

இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, கரிநாள் பேரணியில் பொதுமக்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மோற்கொண்டுள்ளதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பொது முடக்கத்துக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று கொழும்பில் இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வுகளுக்கு எதிராக வட மாகாண கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டு அடக்க முற்பட்டனர்.

தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிறீதரன் மற்றும் தமிழ்த்தேசிய அரசியல் ஆதரவாளர்களும் போராட்டத்தில் பங்குபற்றினர்.

மேலும், பொது மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியாவில் சுதந்திர தினத்திற்கு ஆதரவாக இடம்பெற்ற வாகனப் பேரணி

சுதந்திர தினத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் வன்னி மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வாகனப் பேரணியில், மோட்டர் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், கார்களில் தேசியக்கொடிகள் கட்டப்பட்டு ஊர்வலமாக வந்திருந்திருந்தன.

புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகே ஆரம்பமான வாகனப்பேரணியானது, ஏ9 வீதியூடாக ஹொரவப்பொத்தானை வீதியினை வந்தடைந்து பஜார் வீதியூடாக மணிக்கூட்டு கோபுர சந்திக்கு வந்து மீண்டும் ஏ9 வீதியூடாக பயணித்து குடியகல்வுத் திணைக்கள வீதியூடாக சென்று புகையிரத நிலைய வீதியினை சென்றடைந்து, வவுனியா - மன்னார் பிரதான வீதியூடாக மீண்டும் பேரணி ஆரம்பித்த இடத்தினை சென்றடைந்திருந்தது.

குறித்த பேரணியை இராணுவ புலனாய்வுப் பிரிவினர் நேரடியாக பேரணியில் கலந்து கொண்டு ஒழுங்கமைத்திருந்ததுடன், சிவசேனை அமைப்பினரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் கறுப்பு தின போராட்டம்

இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி அம்பாறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் சிவில் சமூக அமைப்பினர், காணாமல் ஆக்கப்பட்வர்களது உறவுகள், பொதுமக்கள், தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் என்பன இணைந்து பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரணிகளை தடுக்க தயார் நிலையில் பொலிஸார்

சுதந்திர தினத்திற்கு எதிராக வடக்கு கிழக்கில் தமிழர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். பேரணிகளை தடுப்பதற்காக கலகம் அடக்கும் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

நீர்த்தாரை, கண்ணீர் புகை குண்டுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவருக்கு எதிராக தடை உத்தரவு

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இடம்பெறவிருந்த சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக்கொள்ளும் 5 பேருக்கு எதிராக பொலிஸாரினால் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

இதற்கமைய, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் செயற்பாட்டாளர்களான லீலாதேவி, கலாரஞ்சினி, கோகிலவாணி மற்றும் சிவில் செயற்பாட்டாளர் ஒருவர் அடங்கலாக ஐவருக்கு எதிராகவே தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இரணைமடு சந்தியில் 9 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் கரிநாள் பேரணிக்கு எதிராக தடை உத்தரவு

மட்டக்களப்பில் சுதந்திர தினத்தை எதிர்த்து ஆர்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்த 17 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு இரவோடு இரவாக பொலிஸாரினால் உரியவர்களின் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி பாரிய ஆர்பாட்ட பேரணிக்குஎ ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த நிலையிலேயெ குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினமும், கரிநாளும்

எண்பது வருட இன பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில் இலங்கையில் 76ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இலங்கை தீவில் வாழும் தமிழர்கள் தங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.

தமிழர் பிரதேசங்களில் பல இடங்களில் சுதந்திர தின நிகழ்வுக்கு எதிராக பேரணிகள் இடம்பெறுகின்றன.

கொழும்பில் காலி முகத்திடலில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் சுதந்திர நிகழ்வில் கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள், சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள், அமைச்சர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்கின்றனர்.

எதிர்கட்சி உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொள்ளவில்லை. பொருளாதார நெருக்கடியின்போது இவ்வாறான நிகழ்வுகள் அவசியமற்றவை என எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் இந்நிகழ்வை முற்றாக புறக்கணித்துள்ளன. மலையக தமிழ் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் ஆகியவற்றின் சில பிரதிநிதிகள் இந்நிகழ்வில் பற்குபற்றியுள்ளனர்.

இலங்கைதீவில் இன்று ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதும் குறிப்பிடத்தக்கது.