சாந்தனை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வர நடவடிக்கை: ஜனாதிபதி ரணில் உறுதி, சிறீதரன் தகவல்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தனை அவரது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்வதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சென்னை உயர் நீதிமனறத்தினால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரது வருகைக்காக தாயார் பல வருடங்களாக காத்துக்கொண்டிருக்கின்றார். தனது இறுதிக் காலத்தில் மகன் தன்னுடன் இருக்கவேண்டும் என்றும் விரும்புகின்றார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுடன் சென்று சந்தித்து விளக்கமளித்தபோது சாந்தனை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
சாந்தனின் தாயாரிடமும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய எங்களிடமிருந்தும் கோரிக்கை கடிதமொன்றை வழங்குமாறும் ரணில் கேட்டுக்கொண்டதாக சிறீதரன் ஊடகவியலாளரிடம் தெரிவித்தார்.”
திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சாந்தன் விரைவில் யாழ்ப்பாணத்திற்கு வருவார் என சிறீதரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.