பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திட்டவட்டம்

OruvanOruvan

File Photo

எரிபொருள் விலையில் நள்ளிரவு முதல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம,

பஸ் கட்டணம் தொடர்பில் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளின் பிரகாரம் தற்போதைக்கு பஸ் கட்டணத்தை அதிகரிக்க முடியாது.

பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டுமாயின் உடன்படிக்கைகளின் பிரகாரமே மேற்கொள்ளப்பட வேண்டும் - என்றார்.

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒட்டோ டீசல் 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்புக்கு அமைவாக பஸ் கட்டணம் அதிகரிக்குமா என்ற கேள்விகள் எழுந்த நிலையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவரின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்

தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் விலைக்கு ஏற்ப பஸ் கட்டணத்தை உடனடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் கருத்து தெரிவிக்கையில்,

முன்னதாக (ஜனவரி) டீசலின் விலை லீட்டருக்கு 29 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. பின்னர் அந்த விலை நள்ளிரவு மீண்டும் 05 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது - என்றார்.

இதேவேளை, எதிர்வரும் இரு வாரங்களுக்குள் பஸ் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி ஆரம்ப கட்டணத்தை 35 ரூபாவக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம்

எரிபொருள் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கத்தின் செயலாளர் லலித் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

எனினும், எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி தாக்கம் காரணமாக கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, 10 வீதம் முதல் 15 வீதத்தினால் இந்த கட்டணம் அதிகரிப்படவுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

முச்சக்கர வண்டி கட்டணம்

எரிபொருட்களின் விலை அதிகரித்த போதிலும் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி. மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்கள் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை திருத்தங்களை நடைமுறைப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.