பிறந்து 11 நாட்களேயான சிசு பரிதாபமாக உயிரிழப்பு: குழந்தையை ஐசியு வில் விட்டுவிட்டு தப்பியோடிய பெற்றோர்

OruvanOruvan

File Photo

குருணாகல் போதனா வைத்தியசாலையில் பிரசவித்து 11 நாட்களே ஆன சிசுவொன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குறித்த சிசுவின் பெற்றோரை கண்டுபிடித்து கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவினை குருணாகல் பதில் நீதிவான் சட்டத்தரணி ஜயபிரேமா பி. தென்னகோன் குருணாகல் தலைமையக பொலிஸாருக்கு பிறப்பித்துள்ளார்.

குருணாகல் வைத்தியசாலையில் புதிதாகப் பிறந்த ஆண் குழந்தை, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிறந்து 11 நாட்கள் ஆன நிலையில் உயிரிழந்தது.

குருணாகல் போதனா வைத்தியசாலையில் குழந்தையின் பிரேதப் பரிசோதனையை மேற்கொண்டதன் பின்னர் பதில் நீவான் பொலிஸாருக்கு உரிய உத்தரவை வழங்கியுள்ளார்.

குறைப்பிரசவத்தில் குழந்தையைப் பெற்றெடுத்த தாய், குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துவிட்டு யாரிடமும் சொல்லாமல் சில நாட்களுக்கு முன் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்துள்ளது.

இதன்படி, உயிரிழந்த சிசுவின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக பெற்றோரைக் கண்டுபிடித்து அவர்கள் தொடர்பான மரபணு (DNA) பரிசோதனையை மேற்கொள்ளுமாறு பதில் நீதவான் சட்டத்தரணி தென்னகோன் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

குழந்தையின் பெற்றோர் நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடும் என்ற தகவலையும் கவனத்தில் கொண்ட பதில் நீதவான் அவர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முடியாதவாறு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டார்.

பொல்கஹவெல கொடவெல பிரதேசத்தில் வசிக்கும் இளம் தம்பதியரே இந்த குழந்தையின் பெற்றோர் என சந்தேகிக்கப்படுவதாகவும், தம்மி அபேசிங்க என்ற யுவதியே குழந்தையை பெற்றெடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் கொடுத்த முகவரி போலியானது என சந்தேகம் அடைந்த பொலிஸார், அவர்களை கைது செய்வதற்காக அவர்கள் பதுங்கியிருக்கும் இடங்களில் விசாரணை நடத்தியும் வருகின்றனர்.