ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜனின் நினைவேந்தல் நிகழ்வு: ஊடக அமைப்புகள் ஏற்பாட்டில் அனுஷ்டிப்பு
திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜனின் 18 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் அமைந்துள்ள நினைவு தூபி வளாகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி போராட்டம்
காங்கேசன்துறையில் மக்களது காரணிகளை அபகரித்து சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த விகாரையை அகற்றுமாறு கோரி ஒவ்வொரு போயா தினமும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்களால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 18ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு
திருகோணமலையில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 18 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று வவுனியா ஊடாக அமையத்தில் இடம்பெற்றது.
ஊடக அமையத்தின் தலைவர் கு.கோகுலனின் தலைமையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் சுகிர்தராஜனின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழில் டெங்கு விழிப்புணர்வு நடைபவனி
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி இன்று இடம்பெற்றது.
இந்த விழிப்புணர்வு நடைபவனி திருநெல்வேலி சந்தியில் ஆரம்பித்த டெங்கு நோய் விழிப்புணர்வு நனடபவனி பலாலி வீதி வழியாக பரமேஸ்வரா சந்தியினை அடைந்து அங்கிருந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் நிறைவடைந்தது.
நல்லூர் கந்தனின் 290 நெற்புதிர் அறுவடை நிகழ்வு
நல்லூர் கந்தன் ஆலயத்தில் 290ஆவது நெற்புதிர் அறுவடை நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் 'புதிர் தினம்' எனும் பாரம்பரிய நிகழ்வில் கோவில் அறங்காவலரும், சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்தனர்.
அறுவடைசெய்த நெல்லில் பிரசாதம் தயாரித்து நல்லூர் கந்தனுக்கு படைத்து தொடர்ந்து இடம்பெற்ற பூஜைகளையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக யாழில் போராட்டம்
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக இன்றைய தினம் புதன்கிழமை காலை யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்திற்கு முன்பாக யாழ் கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஜனநாயகத்தை அச்சுறுத்தாதே, நிகழ் நிலை காப்புச் சட்டத்தை மீளப்பெறு, ஊடகங்களை சமூக ஊடகங்களை நசுக்கும் நிகழ்நிலை காப்பு சட்டத்தை மீளப்பெறு போன்ற பல கோரிக்கைகள் போராட்டகாரர்களால் வலியுறுத்தப்பட்டது.
வவுனியா மேல் நீதிமன்றத்தினால் 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா எரித்து அழிப்பு
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மேற்பார்வையில் இன்று 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா எரித்து அழிக்கப்பட்டது. கடந்தவருடம் நீதிமன்றத்தில் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட 12 வழக்குகளில் முன்னிலைப்படுத்தப்பட்ட 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சாவே இவ்வாறு பொலிஸாரின் ஒத்துழைப்புடன் எரித்து அழிக்கப்பட்டது.
ஊடக அடக்குமுறைக்கு எதிராக நாளை யாழில் போராட்டம்
ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக நாளைய தினம் மாலை 4 மணிக்கு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சுதந்திர ஊடக இயக்கம் உள்ளிட்ட தென்னிலங்கை ஊடக அமைப்புக்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்படவுள்ள குறித்த போராட்டதில் அனைத்து தரப்பினரையும் அணி திரளுமாறு யாழ். ஊடக இயக்கம் கோரியுள்ளது.