மட்டுவில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம்: நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை மீளபெறுமாறு வலியுறுத்தல்
![Oruvan](https://gumlet.assettype.com/oruvan/2024-01/b594d8ed-7ee6-460f-971a-f746ba38aab2/3E3DE7D7_60D5_45D2_AA13_EC01539788E6.jpeg?format=webp&w=800&q=70)
![Oruvan](/site-related-assets/no-image.webp)
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் என்பவற்றை மீளப்பெறுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியொன்றும் உண்ணாவிரத போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டம் கிழக்கு அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 'இலங்கை அரசாங்கம் அடக்குமுறை சட்ட வரைபுகளை மீளப்பெறவேண்டும்' என்ற தொனிப்பொருளில் இடம்பறெ்றது.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் ஆரம்பமான பேரணி மட்டக்களப்பு காந்திபூங்கா வரையில் தொடர்ந்து அங்குள்ள நினைவுதூபிக்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது கிழக்கு மாகாண சிவில் சமூகத்தின் பிரகடனம் ஒன்றும் வாசிக்கப்பட்டு அவை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் வழங்கிவைக்கப்பட்டது.
“நினைவுத்தூபிக்கு அருகே உண்ணாவிரத போராட்டம் நடாத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடை பொலிஸாரின் உத்தரவுக்கு அமைவாக அகற்றப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரிடம் அனுமதிபெற்ற பின்னரே மேடை அமைக்கப்பட்டது. இருப்பினும் எமக்கு வந்த தகவலுக்கமைய குறித்த மேடை அகற்றப்பட்டது.
இருப்பினும் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளோம்.
ஜனநாயக ரீதியான போராட்டத்தினை அடக்கமுனைகின்றனர். இதற்கு எவ்வகையிலும் எம்மால் ஆதரவு வழங்க முடியாது” என கிழக்கு அபிவிருத்தி ஒன்றியத்தின் பணிப்பாளர் புஹாரி மொகமட் தெரிவித்தார்.