தமிழரசு கட்சியின் புதிய தலைவர் யார்?: மூவரின் பெயர்கள் பரிந்துரை
இலங்கை தமிழரக் கட்சியின் புதிய தலைவர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் உயர்பீடக் கூட்டம், கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனின் கொழும்பில் இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளிடும் போதே எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கட்சி மாநாடு சம்பந்தமாக பல விடயங்கள் அலசி ஆராயப்பட்டன. தலைவர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சீனித்தம்பி யோகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் உட்பட எனது பெரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
போட்டி இல்லாமல் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தலைவர் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்ற கருத்து பொதுவாக முன்வைக்கப்பட்டது.
இணக்கப்பாட்டுடனோ அல்லது கட்சி யாப்பின் பிரகாரமோ தேர்வு 21 ஆம் திகதி நடைபெறும். அதனை தொடர்ந்து கட்சி மாநாடு 28 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறும்” என தெரிவித்தார்.