யாழ்ப்பாணத்தில் தலைக்கவசம் அணியாமல் பயணித்த இளைஞர்கள்: பொலிஸார் துரத்திச் சென்றதால் விபத்து

OruvanOruvan

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக வேகமாக சென்றபோது காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானார்.

யாழ்ப்பாணம் பலாலி வீதி கந்தர்மடம் சந்தியில் குறித்த விபத்துச் சம்பவம் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

காயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த போது அவ் வீதியில் வந்த இரண்டு இளைஞர்கள் தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

இதனை அவதானித்த போக்குவரத்து பொலிஸார் இரண்டு இளைஞர்களும் பயணித்த மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்றனர்.

பொலிஸாரிடமிருந்து தப்பித்து செல்வதற்காக அதி வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் கந்தர்மடம் சந்தியில் பயணித்த காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

சம்பவ இடத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் தப்பித்தோடிய நிலையில் மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.